சென்னையில் வெயில் கம்மி....மதுரையில் 105 டிகிரி!: மக்கள் வீட்டுக்குள் முடக்கம்
சென்னை: தமிழகத்தில் மதுரை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் சராசரியாக 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகியுள்ளது. ஆனால் சென்னை நகரில் மட்டும் 93 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவான ஊர்களின் பட்டியலில், மதுரை -105, திருச்சி -104, கரூர் பரமத்தி- 103, சேலம் -102, தருமபுரி -101, கோவை- 100 இடம் பிடித்திருக்கிறது.
வெயிலூரான வேலூரில் 99 டிகிரியும் கிழக்குக் கடற்கரையோர நாகப்பட்டினத்தில் 96, கடலூரில் 95, புதுச்சேரியில் 94, சென்னையில் 93 டிகிரி வெயிலும் பதிவாகி இருந்தது.
சென்னையில் நேற்று காலை முதல் மிதமான வெப்பநிலை இருந்து வந்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைவாக உணரப்பட்டது.
இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நேற்று காலை 10 மி.மீ. மழை பெய்துள்ளது.
நெல்லையில் 103 டிகிரி வெயில்: மக்கள் வீட்டுக்குள் முடக்கம்:
நெல்லையில் தொடர்ந்து 103 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
நெல்லையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மின்தடையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் புழுக்கத்தில் தவித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களாக வெயில் சதம் அடித்து வரும் நிலையில் அதிகபட்சமாக கடந்த 14ம் தேதி வெயில் 106 டிகிரியாக பதிவானது. தொடர்ந்து 100 டிகிரிக்கு குறையாமல் பதிவான வெயில் தற்போது 103.3 டிகிரியாக பதிவாகி வருகிறது. இதனால் புழுக்கம் கடுமையாக இருந்து வருகிறது. அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டு வருகிறது.
கடும் வெயில் காரணமாக குளிர் பானங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றது. அதிகாலை மற்றும் மாலை வேளையில் அருகிலுள்ள ஆற்றில் ஏராளமானோர் நீராடி வெப்பத்தை தணித்து வருகின்றனர். அக்னி நட்சத்திரம் இன்னும் ஆரம்பிக்காத நிலையில் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications