கூடங்குளம் அணு உலையில் பழுதான 4 வால்வுகள் மாற்றம்: அணு மின் கழகம்
திருநெல்வேலி: கூடங்குளம் அணு மின்நிலையத்தில் குறைபாடுகள் இருந்த 4 வால்வுகளும் மாற்றப்பட்டுவிட்டதால் உலையின் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை என்று இந்திய அணு மின்கழகம் தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உற்பத்தி தொடங்குவதற்கு முந்தைய சோதனையின்போது 4 பாதுகாப்பு வால்வுகள் பழுதுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக அணு உலையின் பாதுகாப்புக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக அணு உலை எதிர்ப்பாளர்கள் கூறிவந்தனர்.
இதுகுறித்து இந்திய அணுமின்கழக செயல் இயக்குனர் நளினிஷ் நாகெய்ச் விடுத்துள்ள அறிக்கையில்,
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 4 பாதுகாப்பு வால்வுகள் தொழிற்சாலை முறைப்படி பரிசோதிக்கப்பட்டது. அப்போது அந்த கருவிகள் அவை வடிவமைக்கப்பட்டதன் அடிப்படையில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. அதன் செயல்பாடுகளில் வேறுபாடுகள் காணப்பட்டது.அந்த 4 வால்வுகளும் இப்போது மாற்றப்பட்டுவிட்டன.
இதைத் தொடர்ந்து அணு மின்கழக ஒழுங்குமுறை வாரியத்தின் ஒப்புதல் பெறுதல், செயல்படுத்தும் அனுமதிக்கான நடவடிக்கைகள் எடுப்பது போன்ற கூடங்குளம் அணு உலையை செயல்படுத்துவதற்கான மேல் நடவடிக்கைகள் உரிய நேரத்தில் எடுக்கப்படும்.கூடங்குளம் அணு மின்நிலையத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த ஒவ்வொரு கருவிகளின் செயல்பாடுகளையும் மிகவும் தீவிரமாக கண்காணிக்கும் பணிகள் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.