எகிப்து நாட்டின் மீண்டும் பலூன் பயணங்கள்!
எகிப்து நாட்டில், கடந்த பிப்ரவரி மாதம், 26ஆம் தேதி ஏற்பட்ட பலூன் விபத்தில், ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 19 பயணிகள் இறந்தனர். எனவே, எகிப்து அரசு, கடந்த இரண்டு மாதங்களாக இத்தகைய பயணங்களை நிறுத்தி வைத்திருந்தது.
பலூன் பயண நிறுவனங்களின் தொடர்ந்த முயற்சிக்குப்பின், புராதனமான லக்சர் நகரில் இருந்து, இன்று மீண்டும் இந்தப் பயணங்கள் துவங்கப்பட்டன. இன்று காலை, நான்கு பலூன்களில், 70 க்கும் மேற்பட்ட பயணிகள், தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
லக்சர் நகரின் தலைவர், எஸ்சாத் சாத், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும்வகையில் முதல் பலூனில் பயணம் செய்தார். அரசு அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி உள்ளதாகவும், விமானத்தொழில் நுட்ப வல்லுநர் ஒருவர், பலூன்கள் பறப்பதற்கு முன்னும், பறந்த பின்னரும் சோதனை செய்து அறிக்கை அளிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சங்கத்தலைவர் அகமத் அபௌத் தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்துத் துறையில் இருந்து, ஒரு தொழில்நுட்பக் குழு வந்து இந்த பலூன்களை பரிசோதித்து சென்றதாகவும் நகரத் தலைவர் உறுதி செய்தார். விபத்து நடந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை.
இத்தகைய விபத்துகள், அயல்நாட்டுப் பயணிகளின் வருகையைக் குறைக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்களும், அரசும் இருக்க, இந்தப் பயணங்கள் மூலம், அதிக அந்நிய செலாவணியை ஈட்டிய பலூன் நிறுவனங்கள், பெரும் முயற்சிக்குப்பின் இந்த பயணங்களை மீண்டும் துவக்கியுள்ளன.