சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் மீண்டும் ஊடுருவல்! எல்லையில் பதற்றம் தொடர்ந்து அதிகரிப்பு!!
வடக்கு லடாக் பகுதியின் தவுலத் பெக் ஒல்டி என்ற இடத்தில் கடந்த 15-ந் தேதி சீன ராணுவத்தினர் 10 கிலோ மீட்டர் தொலைவு இந்திய எல்லைக்குள் ஊடுருவி ஒரு சோதனைச் சாவடி நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராணுவத்தினர் அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று ஏப்ரல் 18-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து இருநாடுகளின் பிரிகேடியர்கள் தரத்திலான 'கொடி அமர்வு' என்ற சம்பிராதய முறையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தோல்வி அடைந்தது.
இந்நிலையில் நேற்றும் பிரிகேடியர் பிஎம் குப்தாவும் சீன பிரிகேடியர் அயன் யான்டியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஏப்ரல் 21-ந் தேதியன்றும் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய வான் எல்லைக்குள் ஊடுருவியது பற்றி கவலை தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துவிட்டது. இந்நிலையில் மீண்டும் நாளை 26-ந் தேதி பிரிகேடியர்கள் தலைமையிலான 'கொடி அமர்வு' பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது.
தற்போதைய எல்லைப் பதற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, சீனாவுடன் பல்வேறு நிலைகளிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். நாட்டின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த எந்த ஒருநடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றார். இதேபோல் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், இருநாடுகள் இடையேயான ஒப்பந்தங்களை சீன ராணுவம் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றார். ஆனால் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், வழக்கமான ரோந்து பணியில்தான் தமது ராணுவத்தினர் ஈடுபட்டதாகவும் ஒருபோதும் ஊடுருவவில்லை என்றும் பதிலளித்திருக்கிறார்.
இதனிடையே எல்லை பதற்றம் மற்றும் இருநாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி குறித்து விவாதிக்க இந்திய ராணுவ அதிகாரிகள் குழு ஒன்று சீனா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல பதற்றத்தைக் குறைக்க வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் வரும் மே மாதம் 9ம் தேதி சீனா செல்லவுள்ளார்.
அதே நேரத்தில் சீனாவின் ஊடுருவல் முயற்சிகளை முறியடிக்க எல்லையில் படைகளைக் குவிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ஊடுருவல் விவகாரம் குறித்து இந்திய ராணுவத் தளபதி விக்ரம் சிங் கடந்த 2 நாட்களாக சீன எல்லைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திவிட்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அமைச்சருடன் ராணுவ தளபதி சந்திப்பு:
இந் நிலையில் ராணுவ தளபதி பிக்ரம் சிங், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனியை சந்தித்துப் பேசினார்.
லடக் பகுதியில் தற்போதிருக்கும் நிலை குறித்தும், வடகிழக்கு கமாண்டர் தலைமையிலான படை அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஆண்டனியிடம் பிக்ரம் சிங் விளக்கினார்.