கோவை வணிக வளாகத்தில் பெரும் தீ: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி; ஏராளமானோர் படுகாயம்
கோவை: கோவையில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் உள்டப 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
கோவை-அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் அருகே 4 மாடி கொண்ட சேரன் பிளாசா என்ற வணிக வளாகம் உள்ளது. இதன் கீழ் தளத்தில் ஆக்சிஸ் வங்கியும் 2வது, 3-வது தளத்தில் சில தனியார் நிறுவனங்களும் 4வது தளத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்டு இன்சூரன்ஸ் நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன.
பின்னர் மளமளவென தீப்பிடித்து எரிந்ததது. இந்தத் தீ 2-வது மற்றும் 3-வது தளத்தில் நிறுவனங்களுக்கும் 4-வது தளத்தில் உள்ள காப்பீட்டு நிறுவனத்துக்கும் பரவியது.
கீழ் தளத்தில் உள்ள வங்கியிலும் தீ பரவ தொடங்கியது. இதையடுத்து அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தப்பித்து வெளியேற முயன்றனர்.
வணிக வளாகம் முழுவதும் தீப்பிடித்து பெரும் புகைமூட்டமாக இருந்ததால் அவர்களால் எளிதில் வெளியேற முடியவில்லை.
சிலர் தப்பித்து வெளியேறினர். ஆனால் பலர் வெளியேற முடியாமல் மயங்கி விழுந்தனர்.
இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ராணுவ தீயணைப்பு வண்டிகளும் விரைந்து வந்தன.
கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் தீயணைப்பு வீரர்களும் பொது மக்களும் இறங்கினர்.
சுமார் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் இருந்த வீரர்களும் வணிக வளாகத்தை சுற்றி நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். ராணுவ ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியும் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது.
நால்வர் பலி:
மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 2 பேர் வணிக வளாகத்தில் இருந்து எழுந்த தீயின் அகோரம் தாங்காமல் தீயணைப்பு வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் அவர்கள் காயமடைந்தனர்.
தீ கட்டுக்குள் வந்ததும் தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு தளமாக சென்று யாரும் சிக்கி இருக்கிறார்களா என்று பார்த்து அவர்களை மீட்டனர். அப்போது இரு பெண்கள் உள்பட 4 பேர் உடல்கள் கருகி பிணமாக கிடந்தனர்.
இந்தப் பெண்கள் ஷேர் கான் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் ஆவார்.
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் சுகன்யா (25), ஜீவிதா (26) ஆகிய 2 பெண் ஊழியர்களும் 2-வது தளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை கீழே குதித்து தப்பிக்குமாறு சிலர் கூறவே, இருவரும் மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் தவிர சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு:
இதற்கிடையே காலை 10.15 மணிக்கு வணிக வளாகத்தில் பிடித்த தீ 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மதியம் 12.15 மணிக்கு அணைக்கப்பட்டது. எனினும் புகை மூட்டம் அடங்கவில்லை. தீவிபத்து காரணமாக கோவை-அவினாசி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.