ஊழலைப் பற்றி ராகுல் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்று உள்ளது: சுஷ்மா ஸ்வராஜ்

கர்நாடக மாநிலம் ஷிக்காவ்னில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
காங்கிரஸின் ஊழல் பூமியோடு நின்றுவிடவில்லை அதையும் தாண்டி விண்ணைத் தொட்டு, பாதாளத்தையும் தொட்டுள்ளது. காங்கிரஸ் மூன்று உலகங்களிலும் தனது ஊழல் சிறகை விரித்துள்ளது. மேலும் ஊழலைப் பரப்ப அதற்கு இடமில்லை. பாஜகவை குறை சொல்லும் முன்பு ராகுல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இமேஜை முதலில் ஒழுங்குபடுத்தட்டும். காங்கிரஸ் தலைமையிலான அரசு சாதாரண மக்களுக்காக எதையும் செய்யவில்லை.
அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை தடுக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறிவிட்டது. அதனால் விலை உயர்வு ஏழை, எளிய மக்களுக்கு பாரமாகிவிட்டது. பல லட்சம் கோடி ஊழல் வழக்குகளில் காங்கிரஸுக்கு தொடர்பு உள்ளது. கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு பிறர் மீது கல்லை வீசக் கூடாது என்ற பொது அறிவு கூட காங்கிரஸுக்கு இல்லையே.
கர்நாடகாவில் பாஜக வென்றதன் மூலம் தென்னிந்தியாவில் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தது. மாநிலத்தை முன்னேற்ற பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. என்னதான் உட்கட்சி பூசல் இருந்தாலும் அது மாநிலத்தின் வளர்ச்சியை ஒருபோதும் பாதித்ததில்லை.
காங்கிரஸில் ஒற்றுமையே இல்லை. முதல்வர் பதவிக்கு வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸில் ஒரு முறையும் இல்லை. அதனால் முதல்வர் பதவிக்கு பலர் அடித்துக் கொள்கின்றனர். ஆனால் பாஜக அப்படி இல்லை. ஜெகதீஷ் ஷெட்டர் தான் முதல்வர் வேட்பாளர் என்று நாங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications