பிரதமர், 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்! இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது!!
இன்று காலை சபை கூடியதும் மாலத்தீவில் இருந்து வந்த நாடாளுமன்றக் குழுவினரை சபாநாயகர் மீராகுமார் வரவேற்றார். அதன் பின்னர் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும், லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கிய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அறிக்கையை திருத்தியதற்காக சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் ராஜினாமா செய்யவும் வலியுறுத்தப்பட்டது. 1984ஆம் ஆண்டு சீக்கியர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சஜ்ஜன்குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அகாலி தள உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். பிஜூ ஜனதா தளம் மற்றும் அதிமுகவினரும் எழுந்து முழக்கங்களை எழுப்பினர். சமாஜ்வாடி கட்சியினர் மதசிறுபான்மையினர் நலனுக்காக சச்சார் கமிட்டி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முழக்கங்கள் எழுப்பினர். இந்த அமளியால் லோக்சபா நடவடிக்கைகள் பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டன. மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. ராஜ்யசபா நடவடிக்கையும் எதிர்க்கட்சிகளால் இன்று முடங்கின.