கூடங்குளம்: மக்களின் அச்சத்தை போக்குங்கள்… உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய 15 நெறிமுறைகள்
தரம் முக்கியம்
அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள உதிரிபாகங்கள் மற்றும் இயந்திரங்களின் தரம் முக்கியமானது. எனவே, தரத்தை உறுதி செய்து அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அணுமின் கழகம், அணுசக்தி இயக்குனரகம் ஆகியவை இறுதி ஒப்புதல் அளித்தபிறகே மின் உற்பத்தி தொடங்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விதிக்கப்பட்ட நிபந்தனைகள், போடப்பட்ட உத்தரவுகளை தேசிய அணுமின் கழகம் ஏற்று செயல்பட்டுள்ளதா என்பதை மத்திய சுற்றுச்சூழல் துறை மேற்பார்வையிட்டு கண்காணிக்க வேண்டும்.
பாதுகாப்பு அவசியம்
அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கிய பிறகு அதன் பாதுகாப்பு முக்கியமானது. எனவே, அணுமின் நிலையம், கதிரியக்க பொருட்கள், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாப்பதற்கு உயர் முன்னுரிமை தர வேண்டும். 3 மாதத்துக்கு ஒருமுறை சோதனை செய்து, குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
அப்படி குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், அதை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரத்தை அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அணுமின் கழகம் அனுப்ப வேண்டும்.
கழிவுகள் அச்சம்
பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மேலாண்மைக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாப்பாக வைப்பதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். இது மக்கள் மனதில் எழுந்துள்ள அச்சத்தை போக்கும் வகையில் இருப்பது அவசியம்.
பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பூமிக்கு அடியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அப்படி ஒரு மையம் அமைக்க 5 ஆண்டுகள் ஆகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.
கதிர்வீச்சு அபாயம்
காற்றில், கடலில் கலக்கும் கதிர்வீச்சு, கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள அளவை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அணுஉலை பாதுகாப்பு தொடர்பாக நிபுணர்களின் 17 பரிந்துரைகளில் 12 நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ளவற்றையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும். பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசூழற்சிக்காக கொண்டு செல்லும்போது இந்திய, சர்வதேச அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்புகளின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
விபத்து ஒத்திகை
தேசிய பேரழிவு மேலாண்மை விதிமுறைகளை அமல்படுத்த தமிழக அரசு, தேசிய அணுமின் கழகம், ஆகியவை தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவ்வப்போது விபத்து ஒத்திகைகளை நடத்த வேண்டும்.
நெல்லை கலெக்டரின் ஒத்துழைப்போடு அணுமின் கழகம் தன்னுடைய சமூக பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பலனடையும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
போலீஸ், தீயணைப்பு படை, டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு விபத்து காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.
வழக்குகள் வாபஸ்
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும். நாட்டின், குறிப்பாக தமிழகத்தின் நலனுக்கு இந்த அணுமின் நிலையம் தேவை என்பதை மக்களுக்கு விளக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணுமின் நிலையம் உற்பத்தியை தொடங்கும்முன் அதன் பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு அதனால் ஏற்படும் விளைவுகள், பயன்படுத்தப்பட்ட உதிரி பாகங்களின் தரம் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், அணுசக்தி கழகம், மத்திய சுற்றுச் சூழல் வனத் துறை, அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை ஆராய்ந்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.