போலி பாஸ்போர்ட் வழக்கு: டெல்லி போலீசுக்கு 5 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த பெண் சென்னையில் கைது
சென்னை: போலி பாஸ்போர்ட்டில் ஆட்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த வழக்கில் டெல்லி போலீசாரால் கடந்த 5 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் குவைத்தில் இருந்து ஒரு விமானம் வந்திறங்கியது. அதில் வந்த பயணிகள் அனைவரையும் குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் கடப்பா செமஞ்சிநாட்டைச் சேர்ந்த அஞ்சம்மா(35) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போலி பாஸ்போர்ட்டில் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பி வைத்த வழக்கில் டெல்லி போலீசாரால் தேடப்படுபவர் இந்த அஞ்சம்மா என்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் இருந்து தப்பிக்க கடந்த 5 ஆண்டுகளாக குவைத்தில் தலைமறைவாக இருந்த அஞ்சம்மாவை அதிகாரிகள் கைது செய்து டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கடந்த 5 ஆண்டுகளாக தங்கள் கையில் சிக்காத அஞ்சம்மாவை டெல்லி போலீசார் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications