தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நில அபகரிப்பு புகார் மனு தள்ளுபடி!
கரூர்: நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சேர்க்க கோரும் மனுவை கரூர் நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் - தெய்வானை தம்பதி. இவர்களின் தத்துப்பிள்ளை கோகுல் (23). இவர், படித்து முடித்து, கோவையில் உள்ள கால் சென்டரில் பணியாற்றி வந்தார்.
ராமலிங்கம் மறைவிற்கு பிறகு, வளர்ப்பு மகன் கோகுலுடன் தெய்வானை கரூர் குளத்துப்பாளையத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், ராமலிங்கத்திற்கு கரூரில் சேலம் பைபாஸ் ரோட்டில் 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு பல கோடி என கூறப்படுகிறது.
கடந்த 2011 ம் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் இருந்து கரூருக்கு வந்த கோகுலை, கரூரைச் சேர்ந்த சிலர் காரில் கடத்தி, கோகுலை மிரட்டி வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கோகுல், கடந்த ஆண்டு செப்டம்பர் 19 ம் தேதி கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நடராஜன், கருப்பண்ணன், பிரபு, பெரியசாமி, மோகன்ராஜ் உட்பட 8 பேரை கைது செய்தனர்.
மேலும், இந்த கடத்தல், நில அபகரிப்பு குறித்து, கடந்தாண்டு ஜனவரி 5 ம் தேதி கரூர் 2 வது குற்றவியல் நீதிமன்றத்தில் கோகுல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகியோரையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் 5 ம் தேதி வக்கீல் மணிராஜ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மாஜிஸ்திரேட் ராமநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாஜிஸ்தி ரேட் ராமநாதன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
நீதி மன்றத்தில், வழக்கு விசாரணை வக்கீல்கள் விவாதமும் நடைபெற்ற போது, இன்னாரை வழக்கில் சேர்க்க வேண்டும் என மூன்றாவது நபர் கோர முடியாது. அதற்கான முகாந்திரம் இல்லை. காவல் துறையினர் தான் இவ்வாறு கோர முடியும் என அரசு வக்கில் வாதாடினார்.
இதனையடுத்து, இந்த மனுவை மாஜிஸ்திரேட் ராமநாதன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, அமைச்சர் செந்தில்பாஜியை இந்த வக்கில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதால், அமைச்சர் செந்தில் பாலாஜி நிம்மதி பெருமூச்சுவிட்டார்.