24 வயது வேலைக்காரப் பெண்ணைக் கொன்ற மலேசிய தம்பதிக்கு 24 ஆண்டு ஜெயில் தண்டனை
கோலாலம்பூர்: பட்டினி போட்டு வேலைக்கார பெண்ணை கொன்ற தம்பதிக்கு 24 ஆண்டு ஜெயில் வழங்கி மலேசியா கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
மலேசியாவை சேர்ந்தவர் சோக் சில் தங். இவரது மனைவி சின்சியூ லிங். இவர்களது வீட்டில் கம்போர் டியாவை சேர்ந்த பெண் மெய் சிகான் லன்டலர் வேலைக்காரியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு வேலைக்கார பெண் சிகான் வீட்டில் மர்மமான முரையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்ததும் போலீசார் பிணத்தை கைப்பறி விசாரணை நடத்தினர். அப்போது, அப்பெண்ணின் உடல் 27 கிலோ எடை மட்டுமே இருந்தது தெரிய வந்தது. அவர் பட்டினி கிடந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து, தங்-லிங் தம்பதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர்கள் வேலைக்கார பெண் சிகானை கடுமையாக அடித்து உதைத்து பட்டினி போட்டதும், அதனால் அவர் மரணம் அடைந்து இருப்பதும் தெரியவந்தது.
விசாரணையைத் தொடர்ந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர், இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு கணவன்-மனைவி இருவருக்கும் தலா 24 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.