பிரதமர் வலிமையானவர் அல்ல, முடிவுகள் எடுக்க முடியாதவராக இருக்கிறார் - முலாயம்
லக்னோ: பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பாஜக தலைவர்கள்தான் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது பிரதமரை கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸுக்கு அவ்வப்போது கரம் கொடுத்து உதவுபவரான சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்.
மன்மோகன் சிங் வலிமையானவர் அல்ல என்றும் அவரால் தனித்து முடிவுகளை எடுக்க முடியவில்லை என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
முடிவுகளை எடுக்கக்கூடிய சுதந்திரம் அவருக்குக் கொடுக்கப்படவில்லை என்றும் முலாயம்சிங் தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளதாவது...

நல்லவர்தான்...
மன்மோகன் சிங் ஒரு நல்ல மனிதர். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவரால் அரசை நடத்த முடியவில்லை. சுதந்திரமான மனிதராக அவர் இல்லை. அவரால் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியவில்லை. அந்த சுதந்திரம் அவருக்குத் தரப்படவில்லை. அவர் வலிமையானவராக இல்லை.இப்படி இருக்கும் ஒருவரால் எப்படி நாட்டை வழி நடத்த முடியும். பிரதமர் வலிமையவற்றவராக இருந்தால் நாடும் பலவீனமாகத்தான் இருக்கும்.

லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் எப்படி...
அவர் ஒருபோதும் லோக்சபா உறுப்பினராக இருந்ததே இல்லை. எப்போதும் ராஜ்யசபா மூலமாகத்தான் நாடாளுமன்றத்திற்குள் நுழைகிறார். இதுவே அவர் பலவீனமானவர் என்பதை நிரூபிக்கப் போதாதா...

தொடர்ந்து தவறான கொள்கை
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தவறான வெளிநாட்டுக் கொள்கை, பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. உள்நாட்டு விவகாரங்களிலும் அது குழப்பமாகவே நடந்து வருகிறது.

விருந்துக்கு ஏன் போகவில்லை...
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வைக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சிக்கு எனக்கு உரிய நேரத்தில் அழைப்பு வரவில்லை. நிகழ்ச்சிக்கு 2 நாட்களுக்கு முன்புதான் அழைப்பு வந்தது. மேலும் அப்போது நான் லக்னோவில் இருந்ததால் வர முடியாமல் போனது. முன்கூட்டியே அழைப்பு வந்திருந்தாலும் கூட என்னால் கலந்து கொண்டிருக்க முடியாது.

பாராட்ட மாட்டேன்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி குறித்து பலர் பாராட்டுப் பத்திரம் வாசிக்கலாம். ஆனால் நான் எப்படி சான்று தர முடியும். அந்தப் பாராட்டு கோஷ்டியில் நான் எப்படி என்னை இணைத்துக் கொள்ள முடியும். நான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு கண்மூடித்தனமான ஆதரவு தரவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்கூட்டியே தேர்தல் வருமா
முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் வருமா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அந்த நோக்கத்தில்தான் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருவதாக எனக்குத் தோன்றுகிறது. முன்கூட்டிய தேர்தலை காங்கிரஸ் கட்சி விரும்புவது போலத்தான் எனக்குத் தெரிகிறது.

இன்று வைத்தாலும் நான் தயார்
அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்திக் கொள்ளட்டும். நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். நாங்கள் தயார். இன்று தேர்தல் நடத்தினாலும் சந்திக்க நாங்கள் தயார்.

மசூதியுடன் சேர்த்து எல்லாவற்றையும் இடித்த பாஜக
பாஜகவுடன் கூட்டணி சேரும் வாய்ப்பே இல்லை. அவர்கள் ஒருவேளை பாபர் மசூதியை இடித்திருக்காவிட்டால் நிலைமையே மாறியிருக்கும். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்திருக்கும். ஆனால் அவர்கள் மசூதியை இடித்தவர்கள். அவர்களுடன் நாங்கள் இணைய முடியாது. மசூதியை இடித்ததன் மூலம் எல்லாவற்றையும் இடித்துத் தள்ளி விட்டது பாஜக.

மோடி குறித்து கவலை இல்லை
குஜராத்தில் அவர்கள் (மோடி) ஏதாவது செய்திருக்கலாம். அங்குள்ள மீடியாக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அதை நான் பெரிதாக எடுக்கவில்லை. குஜராத்தில் உள்ள தொழிலதிபர்கள்தான் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்குக் காரணமே தவிர காங்கிரஸோ, பாஜகவோ அல்லது மோடியோ காரணமல்ல.

மூன்றாவது அணி இப்போது சாத்தியமில்லை
மூன்றாவது அணி என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. தேர்தலுக்குப் பிறகுதான் அது சாத்தியமாகும். இந்த முறை பிராந்தியக் கட்சிகள் தேர்தலில் சிறப்பாக செயல்படலாம் என்று நான் கருதுகிறேன்.

பிராந்தியக் கட்சிகள்தான்
பாஜகவோ அல்லது காங்கிரஸோ தனிப்பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாது. பெரும்பாலான சீட்களை பிராந்தியக் கட்சிகளே கைப்பற்றப் போகின்றன. எனவே பாஜகவை ஆட்சி பீடத்திலிருந்து ஏறாமல் தடுக்க 3வது அணியின் ஆதரவை காங்கிரஸ் நாடும் நிலை ஏற்படும்.

ராகுலால் ஒன்றும் சாதிக்க முடியாது
ராகுல் காந்தியால் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு பலம் தேடித் தர முடியும் என நான் நினைக்கவில்லை. அவரால் ஓட்டுக்களைக் கவர முடியும் என நான் நம்பவில்லை. உ.பி. தேர்தலிலேயே அதைப் பார்த்து விட்டோம். எனவே ராகுல் காந்தியைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றார் முலாயம் சிங்.












Click it and Unblock the Notifications