கோவாவில் பாஜக செயற்குழு கூட்டம்- மோடிக்கு கூடுதல் பொறுப்பு?
பாரதிய ஜனதா கட்சியின் 3 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று கோவா தலைநகர் பனாஜியில் தொடங்கியுள்ளது. இன்றைய முதல் நாள் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலந்து கொள்ளவில்லை. அவர் தமது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தாலும் மோடியுடனான கருத்து வேறுபாடால்தான் அவர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்கிறது பாஜக வட்டாரங்கள்..
தற்போதைய செயற்குழுக் கூட்டத்தில் பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக மோடி நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மோடியை பாஜகவின் நாடாளுமன்ற குழுவில் சேர்த்துக் கொண்டதற்கு அத்வானி தரப்பில் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. மோடியைப் போலவே மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானையும் அக்குழுவில் இணைக்க அத்வானி பிரயத்னம் செய்தார். ஆனால் அது பலன் தரவில்லை. மேலும் மோடிதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்ற கோஷமும் வலுக்க அத்வானி மிகவும் அப்செட் ஆகிப் போனார்.
அண்மையில்கூட மத்திய பிரதேச முதல்வர் சவுகானை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போன்றவர் என்று அத்வானி புகழாரம் சூட்டி ஒரு சர்ச்சைக்கு வித்திட்டிருந்தார். இந்நிலையில்தான் பனாஜி செயற்குழுவில் மோடியை லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக்கப் போகிறார்கள் என்று செய்திகள் பரவின. இதில் அதிருப்தி அடைந்ததால்தான் அத்வானி இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. இதனால் மோடி முகாம் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
மோடிக்கு ஏறுமுகம்! அத்வானிக்கு?