ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்: ஸ்ரீசாந்த், அங்கீத் சவானுக்கு ஜாமின்
ஐ.பி.எல் போட்டியின் போது ஸ்பாட் பிக்சிங்சில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து டெல்லி, மும்பை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நாடுமுழுவதும் சூதாட்டத்தில் ஈடுபட்ட பல தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாலிவுட் நடிகர் விண்டூ தாராசிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ ஆலோசகர் குருநாத் மெய்யப்பன் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோர் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தனர். இதன் மீதான விசாரணை நேற்று டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வினய் குமார் கன்னா, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், நிழல் உலக தாதாக்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான போதிய ஆதாரங்களை காவல் துறை சமர்ப்பிக்கவில்லை என தெரிவித்தார்.
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் உள்ளதா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அவ்வாறு இல்லையெனில், மகாராஷ்ட்ராவில் புதிதாக கொண்டுவரப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில், அவர்கள் குற்றவாளிகள் என நம்புவதற்கில்லை என போலீசாரை நீதிபதி கண்டித்தார்.
ஆனால், விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், ஆவணங்களை வரும் 18ஆம் தேதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதான வீரர்கள் அடிக்கடி குற்றங்களில் ஈடுபடுவர்கள் அல்ல என்று குறிப்பிட்ட நீதிபதி ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் 16 தரகர்களுக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
ஜாமின் கிடைத்த அனைவரும் தங்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்ரீசாந்த்துக்கு ஜாமின் கிடைத்திருப்பதற்கு அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.