பெங்களூருக்குள் நுழைந்துவிட்டோம், 10 இடங்களை தாக்குவோம்: மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு
பெங்களூர் ஜலஹள்ளியில் உள்ள இஸ்ரோவின் கார் பார்க்கிங் பகுதியில் 4 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்று கிடந்தது. அதில் 3 பக்கங்கள் உருதுவிலும், ஒரு பக்கம் ஆங்கிலத்திலும் இருந்தது. உருதுவில் ஒரு பக்கம் கையால் எழுதப்பட்டது மீதமுள்ள 2 பக்கங்கள் அச்சிடப்பட்டிருந்தன. முதல் பக்கத்தில் லக்ஷ்கர் ஜங் பாகிஸ்தான்-பலுசிஸ்தான் பிரிவு என்று எழுதப்பட்டிருந்தது.
ஆங்கிலத்தில் இருந்த பக்கத்தில் பெங்களூரில் உள்ள இஸ்ரோ, பிஇஎல், பிஹெச்இஎல், 2 வழிபாட்டு ஹால்கள், இரண்டு 5 நட்சத்திர ஹோட்டல்கள் உள்பட 10 இடங்களில் எப்படி தாக்குதல் நடத்தப்படபோகிறது என்ற விவரம் இருந்தது.
அந்த கடித்தில் கூறியிருப்பதாவது,
புதிய தலைவர் உமர் அல்லா பக்ஷ் தலைமையில் 40 பேர் கொண்ட குழு பெங்களூருக்குள் வந்துவிட்டோம். நாங்கள் மனித வெடிகுண்டு, கார் வெடிகுண்டு மற்றும் இதர பயங்கர ஆயுதங்கள் வைத்துள்ளோம். பெங்களூர் வரலாற்றில் புதிய தாக்குதலை நடத்தவிருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் குறித்து விசாரணை நடந்து வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் உள்துறை அமைச்சர் கேஜே ஜார்ஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் இந்த கடிதம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.