விஸ்வரூபம் விவகாரம்: இந்து ஆசிரியர் சித்தார்த் வரதராஜனுக்கு கைது வாரன்ட்!
சென்னை: விஸ்வரூபம் படம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு கற்பிக்கும் வகையில் கட்டுரை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தி இந்து நாளிதழ் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனை கைது செய்யுமாறு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முஸ்லீம்களை அவமதிக்கும் காட்சிகளை நீக்கும்வரை கமல்ஹாஸன் நடித்த விஸ்வரூபம் படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்தது. இது குறித்த தி இந்து நாளிதழ் வெளியிட்ட கட்டுரையொன்றில், திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கையை குறிப்பிட்டிருந்தது.
இந்தக் கட்டுரை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும், அவர் மீது அவதூறு கற்பிப்பதாகவும் அமைந்ததாகக் கூறி தமிழக அரசு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்து ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், பதிப்பாளர் மற்றும் அச்சிடுபவர் எம் பத்மநாபன் ஆகியோரை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி சொக்கலிங்கம்.
விஸ்வரூபம் விவகாரத்தில் அறிக்கை வெளியிட்ட கருணாநிதி, அந்த அறிக்கையை பதிப்பித்த முரசொலி பத்திரிகை, அதன் வெளியீட்டாளர், ஆசிரியர் உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications