விஜயகாந்துக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து- 29-ந் தேதி ஆஜராக கோர்ட் உத்தரவு!
"மக்கள் பணத்தை விளம்பரம் மூலம் தமிழக அரசு விரயம் செய்கிறது" என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதற்காக அவர் மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 1-ந் தேதி அவர் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய நாளில் அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மற்றொரு அவதூறு வழக்கில் ஆஜராக சென்றுவிட்டார். இதனால் சென்னை நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், நீதிமன்றத்தில் ஆஜராகததா விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். அத்துடன் வரும் 29-ந் தேதிக்குள் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இந்த பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பிடிவாரண்ட்டை ரத்து செய்ய தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்றைய விசாரணையின் போது விஜயகாந்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்த நீதிபதி சொக்கலிங்கம், வரும் 29-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக விஜயகாந்துக்கு உத்தரவிட்டார்.