சாதி மறுப்புத் திருமணத்திற்கு இவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டுமா?.. சிபிஎம் வேதனை!

இதுதொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்கள் மத்தியில் தர்மபுரி இளவரசனின் மரணச் செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் ஒருங்கே உருவாக்கியுள்ளது. இது இளவரசன் திவ்யாவின் சாதி மறுப்புத் திருமணத்தை ஒட்டி நடந்துள்ள இரண்டாவது உயிர் பலியாகும்.
ஏற்கனவே திவ்யாவின் தந்தை இறந்ததும், அதைத் தொடர்ந்து 3 கிராமங்களைச் சேர்ந்த தலித் மக்கள் மிகக் கொடூரமான தாக்குதலுக்கும், வன்முறைக்கும் உள்ளாக்கப் பட்டதும் நீங்கா ரணமாகப் பதிந்துள்ளன.
அந்த வடு ஆறும் முன்னரே இளவரசனின் மரணம் நிகழ்ந்து விட்டது. சமூக நீதி பாரம்பர்யம் கொண்ட தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணத்துக்கு இவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டும் என்ற அவல நிலை, இளவரசனின் மரணத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.
சாதி மறுப்புக் காதல் அல்லது திருமணம் செய்யும் இளம் தம்பதியர் கொலை செய்யப்படுவது, கௌரவக் கொலைகள் என்ற பெயரில் நாட்டின் பல பகுதிகளில் நடந்து வரும் கொடுமை. தமிழகமும் அதற்கு விதி விலக்கல்ல.
எனவே, பிரிந்து போவதாக திவ்யா எடுத்த முடிவு சாதிய/சமூக நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலே எடுக்கப்பட்டதாகவே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில் இளவரசனின் அகால மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அரசாங்கமும், காவல் துறையும் இது குறித்து தகுந்த விசாரணை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும்.
சாதிய ஒடுக்குமுறை, சாதி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகள் தங்கள் வலுவான குரலை எழுப்ப வேண்டுமென்றும், அத்தகைய சக்திகளைத் தமிழக மக்கள் தனிமைப்படுத்த முன்வர வேண்டுமெனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications