பிளஸ்டூ மாணவிக்கு சட்டவிரோத திருமணம்... தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 17 வயதான பிளஸ்டூ மாணவிக்கு நடக்க இருந்த சட்டவிரோத திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அந்த மாணவி, 10ம் வகுப்பு படித்து பெயிலான அரவிந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். இது இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. முதலில் எதிர்ப்பு வந்தது. ஆனால் மாணவனும், மாணவியும் பிடிவாதமாக இருந்ததால் இரு குடும்பத்தாரும் சேர்ந்து திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.
திருமண ஏற்பாடுகளை சத்தம் போடாமல் தொடங்கினர். ஆனால் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமாருக்கு தகவல் போய் விட்டது. இதையடுத்து தாசில்தார் முத்துநாயகம் தலைமையில் அதிகாரிகள் அரவிந்த் வீட்டுக்கு விரைந்தனர்.
அங்கு திருமணம் சட்டவிரோதமானது என்று கூறி தடுத்து நிறுத்தினர். பின்னர் மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
இதேபோல தூத்துக்குடியில், செளமியா என்ற 8ம் வகுப்பு மாணவிக்கு நடக்கவிருந்த சட்டவிரோத திருமணமும் ஆட்சியரின் தலையீட்டின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது.