பெண்கள், குழந்தைகளுக்கான குற்ற வழக்குகளை விசாரிக்க ஸ்பெசல் கோர்ட்: நீதிபதி பி.சதாசிவம்
டெல்லி: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பான வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவற்றை விசாரிக்க கூடுதலாக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி பி. சதாசிவம் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகள் அதிக அளவில் உள்ளன. இந்த வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த வழக்குகளை கையாள தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.
நீதிமன்றங்கள் எந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் கண்டறிந்து விட்டோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை, இளங்குற்றவாளிகளை கொண்ட வழக்குகள் மற்றும் இழப்பீடு கோரும் வழக்குகள் போன்றவற்றை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வலியுறுத்துவோம்.
கீழ் கோர்ட் முதல், உச்ச நீதி மன்றம் வரை இந்தியா முழுவதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதன் மூலம், நிலுவையில் உள்ள வழக்குகளில், மூன்றில் ஒரு பங்கு வழக்குகள் இந்த சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்று விடும்.
அதிகரித்து வரும் வழக்கு நிலுவை ஆபத்தானது என்று நான் கூறமாட்டேன். அது வரவேற்கப்படுகிறது. இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பல சர்வதேச உறவுகளும் அதிகரிக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வருகின்றன. இதனால் வழக்குகளும் அதிகரிக்கும்.
பல புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டதும், மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதும் வழக்குகள் தேங்க முக்கிய காரணமாகும். முன்பெல்லாம் மக்கள் கீழ் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளை ஏற்றுக்கொண்டு சமாதானம் அடைந்து விடுவார்கள். ஆனால், இப்போது அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை வழக்குகளை மேல் முறையீடு செய்கின்றனர். "என்று அவர் கூறினார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகித்து வரும் நீதிபதி அல்டமாஸ் கபீரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அவருக்கு அடுத்து தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பி. சதாசிவம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 19-ம் தேதி தலைமை நீதிபதியாக பதிவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications