ஓசூரில் அசோக்லேலண்ட் அலுவலகத்திற்கு விசிட் அடித்த யானை: ஊழியர்கள் பீதி
ஓசூர்: காட்டிற்குள் சுற்றித்திரியும் யானை ஒன்று ஓசூரில் உள்ள அசோக் லேலாண்ட் நிறுவனத்திற்கு விசிட் அடித்து ஜாலியாக சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபகாலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. உணவுக்காக அடிக்கடி காடுகளில் இருந்து வெளியே வரும் யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
பேரண்டபள்ளியில் வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் யூனிட் 2 இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பின் பகுதியில் அடர்ந்த காடுகள் உள்ளது.
இந்நிலையில், சுமார் 400 ஏக்கர் பரப்பளவுள்ள அந்த நிறுவனத்தின் பின்புற கேட்டை உடைத்துக் கொண்டு யானை ஒன்று இன்று காலை உள்ளே நுழைந்திருக்கிறது. இதை யாரும் கவனிக்காத நிலையில் நிறுவனத்தின் வளாகத்திற்குள் யானை ஜாலியாக உலா வந்தது.
சிறிது நேரத்திற்கு பின், அங்கு பணிபுரிந்த ஊழியர்களில் சிலர் யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வனத்துறை அதிகாரிகள் வந்து சேர்வதற்கு முன்பாகவே யானை, வந்த வழியிலேயே திரும்பி காட்டுக்குள் சென்றுவிட்டது. இதனால் ஊழியர்கள் நிம்மதியடைந்தனர்.