என்.எல்.சி. பங்குகளை வாங்க முன்வந்துள்ள அதிமுக அரசுக்கு ஞானதேசிகன் பாராட்டு
சென்னை: என்.எல்.சி. பங்கு விற்பனை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் எம்.பி. பல்வேறு கட்டங்களாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், கட்சி வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் கருத்து கேட்கப்பட்டது. மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கையை முகுல் வாஸ்னிக் தொடங்கி வைத்தார். முதல் படிவத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பெற்றுக் கொண்டார்.
அப்போது ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரும் ஜூலை 19ம் தேதி காங்கிரஸ் உள்ளாட்சி பிரதிநிதிகளின் கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் கலந்து கொண்டு கருத்து கேட்பார். பின்பு, மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
என்.எல்.சி. விவகாரத்தில் செயல் விதிப்படி 100 சதவீத பங்குகளை ஒரே நிறுவனம் வைத்திருக்க முடியாது. எனவே தான் 5 ஆயிரம் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு வாங்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார்.