புத்த கயா குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட குற்றவாளியின் படம்: வெளியிட்டது என்.ஐ.ஏ
டெல்லி: புத்தகயா தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவனின் உருவபடத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி வெளியிட்டுள்ளது.
பீகார் மாநிலம் புத்த கயாவில் உள்ள மகா போதி கோயிலில்,கடந்த ஜூலை 7 ஆம் தேதி நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 2 புத்த துறவிகள் காயமடைந்தனர்.
இந்த இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், நேரில் பார்த்த சாட்சியம் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபரின் வரைபடத்தை என்ஐஏ வெளியிட்டுள்ளது.
அந்த சதிகாரன் புத்த பிட்சு வேடத்தில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உருவபடத்தில் உள்ளது போன்று சந்தேகமுள்ள நபரை மக்கள் அடையாளம் காட்டவும் என்ஐஏ கேட்டுக் கொண்டுள்ளது.
கோயிலை சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான படங்களை தேசிய புலனாய்வு அமைப்பு ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த போது காரில் தப்பிச் சென்ற நபர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
லக்ஷர் இ தொய்பா மற்றும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் புத்தகயா குண்டுவெடிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை தொடர்ந்து வருகிறது.