டெல்லியில் இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட 200 மாணவர்களுக்கு தலைசுற்றல், மயக்கம்
டெல்லி: டெல்லியில் இரும்புசத்து மாத்திரை சாப்பிட்ட 200 மாணவர்கள் தலைசுற்றல், வாந்தி, மயக்கத்திற்கு ஆளான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் மாணவ - மாணவிகள் ஊட்டச்சத்து பெறுவதற்காக சுகாதாரத்துறை சார்பில் இரும்பு சத்து மாத்திரை கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அசோக் விகார் ‘எச்' பிளாக்கில் உள்ள சர்வோதயா கன்னியா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை கொடுக்கப்பட்டது. மாத்திரை சாப்பிட்ட சுமார் 30 நிமிடங்களில் 200 மாணவ-மாணவிகளுக்கு தலை சுற்றல், மயக்கம், வாந்தி ஏற்பட்டது.சில மாணவர்கள் கடும் வயிற்று வலியால் துடித்தனர்.
இதையடுத்து சுந்தர்லால் ஜெயின் ஆஸ்பத்திரியில் 8 மாணவர்கள் குருதெக் பகதூர் ஆஸ்பத்திரியில் 7 பேர், பிரவேஸ்சந்தர், இந்து ராவ், ஆரோக்ய சன்ஸ்தன், அம்பேத்கர் ஆஸ்பத்திரிகளில் 6 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்கள் 21 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 6 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்பினார்கள்.
டெல்லி வடமேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் கருணாகரன் இது தொடர்பாக விசாரணை நடத்தினார். இந்திய தண்டனை சட்டம் 337-வது பிரிவின்கீழ் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால் டெல்லி மாநில அரசு அதிகாரிகள் இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடும் மாணவர்களில் ஒரு சதவீதம் பேருக்கு இப்படி பக்க விளைவுகள் ஏற்படுவது சகஜம்தான் என்று டெல்லி மாநில சுகாதார துறை விளக்கம் அளித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவர்கள் பலியான சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது போன்ற சம்பவம் மராட்டியம், உத்தரபிரதேசம் மாநிலங்களிலும் நடந்தது.தமிழ்நாட்டில் நெய்வேலியில் சத்துணவு சாப்பிட்ட 106 மாணவிகள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.