ஆட்டோ கட்டண விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ. 10,000 அபராதம் விதித்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தாத தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வக்கீல் ராமமூர்த்தி என்பவர், உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இயக்கப்படும் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்படவில்லை. இதனால் பயணிகளுக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகிறது. ஒரே சீரான ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்படாததால் அவரவர் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் ஆட்டோக்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே வருகிறது. எனவே ஆட்டோக்களின் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும். ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க ஆவன செய்ய வேண்டும். எல்லா ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் நடந்தது. இது குறித்து துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருப்பதால் கால அவகாசம் தேவை என்று அப்போது தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மே 6ல் விசாரணை
இதையடுத்து மே மாதம் 6 ம் தேதிக்கு இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டு, அன்றைய தினம் புதிய கட்டண விகிதம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.மே 6 ம் தேதியும் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, போக்குவரத்து துறையினர் புதிய கட்டண விகித பட்டியலை தயாரித்து வருகின்றனர், இது தொடர்பாக ஆட்டோ தொழிற்சங்கத்தினர் பேசி முடிவெடுத்து வருகின்றனர், எனவே கால அவகாசம் வேண்டும் என்று கோரியது.இதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் ஜூலை 6ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
2 மாத அவகாசம்
இரண்டு மாதகால அவகாசத்திற்குப் பின்னர் ஜூலை 6ம் தேதியும் தாக்கல் செய்யவில்லை. அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது 2 வார காலம் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி நேற்று 22ம் தேதி கடைசி நாள். அன்றைய தினம் புதிய கட்டண விகிதம், மீட்டர் பொருத்தப்படுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த எல்லா விவரங்களையும் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, லோடா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், தமிழக ஆட்டோக்களில் ஜி.பி.எஸ் வசதியுடன் கூடிய மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டியுள்ளது. மேலும் இது தொடர்பான தொழில் நுட்பங்கள் மற்றும் ஆட்டோ சங்கங்களின் கருத்துக்கள் கேட்கவேண்டியுள்ளது. எனவே ஒரு மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரினார்.
ரூ.10000 அபராதம்
இதை மறுத்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, ஏற்கனவே 2 முறை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களுக்கு ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயித்தல், புதிய கட்டண விகிதம் வெளியிடுதல், மீட்டர் பொருத்துதல் போன்றவை பொதுமக்களுக்கான பிரச்னைகள். இதுபோன்ற விஷயங்களில் தமிழக அரசு கூடுதல் அக்கறை காட்டியிருக்க வேண்டும். ஆனால் காட்டவில்லை.நீதிமன்றம் கேட்டிருந்த எல்லா தகவல்களையும் தாக்கல் செய்யவில்லை. எனவே தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இத் தொகையை மனுதாரருக்கு அளிக்க வேண்டும். ஆகஸ்ட் 16ம் தேதி வழக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்று தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.