திருப்பதி பிரம்மோற்சவம் செப்டம்பர் 5-ல் தொடக்கம்
திருமலை: திருமலை வெங்கடாசபதி கோவிலின் பிரசித்தி பெற்ற பிரம்மோற்சவம் செப்டம்பர் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் விழா பற்றி நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இணை அதிகாரி சீனிவாசராஜு கூறியதாவது:
வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்ஸவம் நடைபெற இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா 13ம் தேதி வரை நடைபெறுகிறது. தினந்தோறும் காலை, மாலையில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக காட்சி அளிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை 9-ஆம் தேதி நடைபெறுகிறது. 10-ஆம் தேதி தங்கத்தேர், 12-ஆம் தேதி ரதோத்தஸவம் நடைபெறும். 13-ஆம் தேதி தீர்த்தவாரியுடன் பிரம்மோற்ஸவம் நிறைவு பெறுகிறது.
இருசக்கர வாகனங்களுக்கு தடை
9-ஆம் தேதி கருடசேவை நடைபெறுவதால் 8-ஆம் தேதி இரவு முதல் 10-ஆம் தேதி காலை வரை திருமலைக்கு செல்ல இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமலையிலிருந்து திருப்பதிக்கு வரும் முதல் மலைப்பாதையில் 18 வேகத்தடைகளை அமைக்க உள்ளோம்.
முன்பதிவு ரத்து
பிரம்மோற்சவ சமயத்தில் ஏழுமலையான் தரிசனத்துக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ சமயத்தில் விநியோகிக்க 4 லட்சம் லட்டுகள் வரை இருப்பு வைக்கப்படும்.
கருடசேவை சமயத்தில் திருப்பதியில் உள்ள உள்ளூர்வாசிகளுக்கு பேருந்து நிலையம் வரை செல்ல இலவச பேருந்துகளை இயக்க உள்ளோம் என்றார் அவர்.
குளத்தில் குளிக்க தடை
திருக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணி ஆகஸ்ட் 16-ஆம் முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரை நடைபெறுவதால் அந்நாள்களில் பக்தர்கள் திருக்குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.