தமிழக மாணவர் காங். தலைவர் தேர்தல்.. வென்றார் சுனில் ராஜா!
சென்னை: தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த சுனில் ராஜா என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
ஏற்கனவே இந்த பதவிக்கு தேர்தல் நடந்தபோது அதில் முறைகேடுகள் நடந்ததாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து மாணவர் காங்கிரஸை முழு்மையாக கலைத்து மறு தேர்தலுக்கு உத்தரவிட்டார் ராகுல் காந்தி.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை மறு தேர்தல் நடந்தது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், மாநிலத் தலைவராக ஜி.கே.வாசன் ஆதரவாளர் சுனில் ராஜா வெற்றி பெற்றார். துணைத் தலைவர்களாக வாசன் பிரிவைச் சேர்ந்த பாபு, முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு ஆதரவாளரான ஈஸ்வரமூர்த்தி, தங்கபாலு கோஷ்டியைச் சேர்ந்த தினேஷ் கண்ணன் மற்றும் எந்தக் கோஷ்டியையும் சேராத அசோக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பொதுச்செயலாளர்களாக வாசன் அணியைச் சேர்ந்த சபரி கிரீஸ் ஜெயராஜ், மணிகண்டன், காளிஸ்வரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளர்களாக வாசன் அணியைச் சேர்ந்த பிரவீண், விக்ரமன், மணிகண்டன், ராது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் அனைவரும் மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டனர்.