விருதுநகர், ஈரோடு தொகுதியில் மதிமுக உறுதியாக போட்டியிடும்: வைகோ அறிவிப்பு
நெல்லை: நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் ஈரோடு, விருதுநகர் தொகுதியில் மதிமுக போட்டியிடும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இனி மத்தியில் ஒருபோதும் காங்கிரஸ் ஆட்சியில் அமரமுடியாது என்றும் வைகோ கூறியுள்ளார்.
நெல்லை மாநகர், புறநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் வண்ணார்பேட்டை சகுந்தலா ஓட்டலில் நடைபெற்றது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவரிடம் 1 கோடியே 66 ஆயிரத்து 411 ரூபாய் நிதியளிக்கப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், துணைச்செயலாளர் மின்னல் முகமது அலி மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் தேர்தல் நிதியை வழங்கினர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:
வாரி வழங்கும் மக்கள்
ம.தி.மு.க.வுக்கு பொதுமக்கள் தேர்தல் நிதியை வாரி வழங்கி வருகின்றனர். இதன் மூலம் ம.தி.மு.க.வுக்கு அனைத்து மக்களிடமும் நல்ல மதிப்பு, அங்கீகாரம் கிடைத்திருப்பதை காட்டுகிறது.
மக்களைக் காக்கும் இயக்கம்
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற பாடுபடுகின்ற இயக்கம் ம.தி.மு.க. மக்களின் அனைத்து பிரச்சினைகளிலும் நாங்கள் களத்தில் இறங்கியுள்ளோம். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்ற கொள்கைக்காக நாங்கள் போராடி வருகிறோம். எங்கள் போராட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
சாதி மதங்களைக் கடந்த இயக்கம்
சாதி மதங்களை கடந்து மனித நேயத்திற்காக பாடுபடும் இயக்கம் ம.தி.மு.க. என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.
இங்கிருந்து இலங்கைக்கு மின்சாரமா...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் கொடுக்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. மின் தட்டுப்பாடு உள்ள தமிழகத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பாமல் இருக்க கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கி விடும் என்று மக்களை ஏமாற்றி வருகிறது.
கூடங்குளம் போராட்டம்
அணு உலையை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 2 லட்சம் பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இடிந்தகரை போராட்டத்தை தனிமைப்படுத்த முடியாது. 6 அணு உலை அமைத்தால் தென்னாடு அழிந்து விடும். தரமற்ற பொருட்களால் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்று 50 விஞ்ஞானிகள் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதை ஆய்வு செய்யாமல் உடனடியாக மின் உற்பத்தி தொடங்க உத்தரவிட்டது கண்டிக்கத்தக்கது.
சென்னையில் மிகப் பெரிய போராட்டம்
அணு உலையை மூடக்கோரி வருகிற 5ம்தேதி சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்த இருக்கிறோம். அன்று இடிந்தகரையிலும் பெரும்திரள் போராட்டம் நடைபெறும்.
காங்கிரஸ் மீது கோபத்தில் மக்கள்
காங்கிரஸ் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது. நெய்வேலி பங்குகளை 1 சதவீதம் கூட விற்க கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். தற்போது அந்த பங்குகளை தமிழக அரசு வாங்கியிருப்பது ஆறுதலாக உள்ளது.
ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்
ஈழத்தில் லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்த ராஜபக்சே சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். அங்கு தமிழீழம் மலர வேண்டும் என்பது லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள், மாணவர்களின் விருப்பம். இதை திசை திருப்பும் வகையில் இலங்கையில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு வர இந்திய அரசு முயற்சித்து வருகிறது. இது கண்டனத்துக்குரியது.
இலக்கை விட்டு மாறாதீர்கள் இளைஞர்களே..
தமிழக இளைஞர்கள் தங்கள் இலக்கை விட்டு விட்டு போய்விடக்கூடாது. இளைஞர்கள் தங்கள் லட்சியத்திற்காக தொடர்ந்து போராட வேண்டும். இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை ரத்து செய்ய உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
விருதுநகர் -ஈரோட்டில் கண்டிப்பாக போட்டி
2014 நடாளுமன்ற தேர்தலில் ஈரோடு, விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வகையில் எங்கள் நிலைப்பாடு உறுதியாக இருக்கும். அதில் இருந்து நாங்கள் பின்வாங்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.