திரும்பும் வரலாறு -1: 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவுக்காக.. இன்று 'ஆந்திரா' பிரிவினைக்காக...
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவது உறுதியாகிவிட்டது... வரலாற்றின் விசித்திரம் என்னவெனில் 60 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆந்திர மண்தான் தனியான ஆந்திர மாநிலத்துக்காக போர்க்களம் கண்டது.. இப்போது ஆந்திர மாநிலத்தையே பிரிப்பதற்கான போர்க்களமாகி இருக்கிறது..
நாடு விடுதலை அடைந்த போது தற்போதைய ஆந்திரா, சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக, ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக சிதறுண்டு கிடந்தது. சென்னை மாகாணத்தில் மொத்தம் 12 மாவட்டங்களில் தெலுங்கு பேசும் மக்கள் பெரும்பான்மையினராக இருந்தனர்.
1950-ல் 'ஆந்திர கேசரி' பிரகாசம் கலகம்
பின்னர் மெதுமெதுவாக தெலுங்குபேசும் மக்களின் மாவட்டங்களை உள்ளடக்கி தனி ஆந்திர மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உருவெடுத்தது. ஆனால் காங்கிரஸ் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்னை மாகாண முன்னாள் முதல்வர் டி. பிரகாசம் ராஜினாமா செய்தார். இதனால் அவரை தெலுங்கு பேசும் மக்கள் 'ஆந்திர கேசரி' என்று கொண்டாடினர்.
1951-ல் ஸ்வாமி சீதாராம்
பின்னர் 1951 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக இருந்து துறவியான ஸ்வாமி சீதாராம், தனி ஆந்திர மாநிலத்தைக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். காந்தியவாதி வினோபாவின் வேண்டுகோளை ஏற்று சீதாராம் தமது போராட்டத்தைக் கைவிட்டார்.
1952ல் நேருவுக்கு நெருக்கடி
1952ஆம் ஆண்டு நாடு முதலாவது பொதுத்தேர்தலை சந்தித்தது. அப்போது தெலுங்கு பேசும் மாவட்டங்களில் பிரசாரத்துக்கு சென்ற பிரதமர் ஜவஹர்லால் நேரு கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவானது.
1952 தேர்தல் முடிவுகள்
1952ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 375 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திர பிரதேசத்தில் மட்டும் மொத்தம் 143 தொகுதிகள் இருந்தன. இதில் காங்கிரஸ் 43 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. பெரும்பான்மை இடங்களை கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
'ஆந்திரா' இயக்கம் தீவிரம்
சென்னை மாகாண தேர்தல் முடிவுகள் 'ஆந்திரா' மாநில உருவாக்க இயக்கத்துக்கு வலு சேர்த்து விரிவடைய செய்தது. ஸ்வாமி சீதாராம் பிரம்மாண்ட பேரணிகளை முன்னெடுத்து நடத்தினார். தனி ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் வரையில் சட்டசபை நடவடிக்கைகளை புறக்கணிக்குமாறு 'ஆந்திரா' பகுதி எம்.எல்.ஏக்களையும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனாலும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம்
இந்த நிலையில் 1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 51 வயதான பொட்டி ஸ்ரீராமுலு சென்னையில் தனி ஆந்திர மாநில கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் தெலுங்கு பேசும் மக்களிடம் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. பொட்டி ஸ்ரீராமுலு, காந்தியுடன் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஹரிஜன ஆலய பிரவேசத்துக்காக கடந்த 1946 ஆம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்போது காந்தி தலையிட்டு உண்ணாவிரதத்தை கைவிடச் செய்தார். ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தலையிட காந்தி அப்போது இல்லை.
ஸ்ரீராமுலுவின் மரணமும் ஆந்திரா உருவாக்கமும்
பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதப் போராட்டம் 50 நாட்களைக் கடந்த நிலையில் வேறுவழியின்றி ஆந்திரா மாநிலம் உருவாக்குவது என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்தது. ஆனால் 58 நாட்கள் கடந்த நிலையில் அவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.
வரலாறு காணாத வன்முறை
தனி ஆந்திர மாநில கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்து பொட்டி ஸ்ரீராமுலு உயிரிழந்த சம்பவத்தால் வரலாறு காணாத வன்முறையை சென்னையும் இதர ஆந்திர பிரதேசங்களும் எதிர்கொண்டது. இதனால் வேறுவழியின்று தனி ஆந்திர மாநிலத்தை உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது மத்திய அரசு
1953-ல் ஆந்திரா உதயம் அறிவிப்பு
1952ஆம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி பிரதமராக இருந்த நேரு தனி ஆந்திரா மாநிலம் உதயமாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் போராட்டம் ஓயவில்லை.
இப்போது ஹைதராபாத் நகரம் யாருக்கு என்பதைப் போல அன்று சென்னை யாருக்கு என்பதில் பிரளயமே வெடித்தது குறிப்பிடத்தக்கது.