பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு: தயாநிதி மீதான புகாரில் சிபிஐ விசாரணை முடிந்தது

கடந்த முறை ஐ.மு கூட்டணி அரசில் அமைச்சராக பதவி வகித்த தயாநிதி மாறன் பி.எஸ்.என்.எல்.,லின் 300க்கும் மேற்பட்ட, அதிவேக ஐஎஸ்டிஎன் இணைப்புகளை தமது இல்லத்திற்கு கொடுத்து, அவற்றை தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டி.வி.க்காக முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டன என்பது முக்கியக் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக 2011-ம் ஆண்டில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதா? அல்லது வழக்கை முடித்துக் கொள்வதா? என்பதை சிபிஐ உயரதிகாரிகள் விரைவில் முடிவு செய்வார்கள்.
சென்னை போட் ஹவுஸ் பகுதியில் உள்ள தயாநிதி மாறனுக்கு சொந்தமான வீட்டில், அவர் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, பிஎஸ்என்எல் பொது மேலாளரின் பெயரில் மொத்தம் 323 தொலைபேசி இணைப்புகள் பெறப்பட்டுள்ளன. வெளியே யாருக்கும் தெரியாத வகையில் பூமிக்குக் கீழே இந்த இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை சன் டி.வி. நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன என்று குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
சன் டி.வி. நிறுவனம் பெருமளவில் "டிஜிட்டல் டேட்டாக்களை' பரிமாறிக் கொள்ளவும், "விடியோ கான்பரன்ஸிங்' உள்ளிட்டவற்றை நடத்தவும் தங்கள் நிகழ்ச்சிகள், செய்திகளை சர்வதேச அளவில் அதிவிரைவில் எடுத்துச் செல்ல இந்த இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற சேவைகளுக்கு பிஎஸ்என்எல் அதிக கட்டணம் வசூலிக்கும், ஆனால் சன் டி.வி. அதனை இலவசமாகப் பயன்படுத்தியுள்ளது என்ற தகவல் பின்னர் வெளியானது.
சன் டி.வி. நிறுவனத்தின் தகவல் பரிமாற்றத்துக்காக ஒரு தனிப்பட்ட தொலைபேசி நிலையம் போல இதனை பயன்படுத்தியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்து சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல்தான் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த இணைப்புகள் அனைத்தும் சாதாரண இணைப்புகள் இல்லை. அதிக செலவு பிடிக்கக் கூடிய ஐஎஸ்டிஎன் இணைப்புகள்.
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையில், இந்த புகாரை வழக்காக மாற்றும் அளவுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும், வழக்குப் பதிவு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உயர் அதிகாரிகள் விரைவில் முடிவு செய்வார்கள் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications