திரும்பும் ஆந்திரா வரலாறு...2: அன்று மதராஸ் மனதே! இன்று ஹைதராபாத் மனதே!!
ஹைதராபாத்: 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கோரி தெலுங்கு தேசம் போராடியது.. இன்று பிரிவினைக்காக போராடுகிறது.. அத்துடன் எது தலைநகர் என்ற கோஷமும் உச்ச சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது.. இது 60 ஆண்டுகளுக்கு முன்பும் நடந்த கதைதான்..
பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர்த் தியாகத்தைத் தொடர்ந்து உதயமானது ஆந்திரபிரதேச மாநிலம்.. ஆனால் அத்துடன் ஓய்ந்துவிடவில்லை விவகாரம்... தெலுங்கு பேசும் மக்கள் புதிய சர்ச்சைக்கு வித்திட்டனர்.
அன்று சென்னை
ஆம்.. சென்னைதான் ஆந்திராவின் தலைநகரம் என்று முழக்கம் எழுப்பினர்.. அப்போது மிகவும் பிரபலமான கோஷம் ' மதராஸ் மனதே!".. அதாவது வடசென்னை ஆந்திராவின் தலைநகராகவும் தென்சென்னை 'சென்னை மாகாணத்தின்' தலைநகராகவும் இருக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
ஆனால் தெலுங்கு பேசும் மக்களின் இந்த வீம்பு கோரிக்கை விழலுக்கு இறைத்த நீரைப் போல் ஆனாது.. ஏனெனில் தமிழகத்தில் எழுந்த எதிர்க்குரல்தான்... 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரம் காப்போம்' என்று வடக்கெல்லைக் காவலர் ம.பொ.சிவஞானம் தலையில் போராட்டம் வெடித்தது.
சென்னையை ஆந்திரா கோருவதால் பதிலடியாக திருப்பதி, சித்தூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகள் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று தமிழர்கள் போர்க்கொடி தூக்கினர். இந்த களேபரங்களுக்கு மத்தியில்தான் கர்நூலை தற்காலிக தலைநகரமாகக் கொண்டு ஆந்திரபிரதேச மாநிலம் தொடங்கி வைக்கப்பட்டது.
இன்று ஹைதராபாத்
அன்று சென்னைக்காக ஆந்திர மாநிலத்தவர் போராடினர்.. இன்று அதே ஆந்திர மாநிலத்தவர் தலைநகர் 'ஹைதராபாத்துக்காக' பெரும் போராட்டமே நடத்துகின்றனர். தற்போது 10 மாவட்டங்களை உள்ளடக்கி தெலுங்கானா தனி மாநிலம் கோருவோர் 'ஹைதராபாத்' தான் எங்களது தலைநகர் என்கின்றனர். ஆனால் ஒருபோதும் ஹைதராபாத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்பது எஞ்சிய பகுதியினரின் கோரிக்கையாக இருக்கிறது. அன்று மதராஸ் மனதே! இன்று ஹைதராபாத் மனதே!
இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் சண்டிகர் எப்படி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகராக இருக்கிறதோ அதுபோல ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்கி இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக்கிவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது..
வரலாறு திரும்புதல் என்பது இதுதானோ!