மறுபடியும் ஆந்திர முதல்வராவாரா ரோசய்யா?
ஏற்கனவே ரோசய்யாதான் முதல்வராக இருந்து வந்தார். ஆனால் அவருக்கு ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பும், குடைச்சலும் கொடுத்து வந்ததால் ரோசய்யாவை தூக்கி விட்டு கிரண் குமார் ரெட்டி முதல்வராக்கப்பட்டார்.
ரோசய்யாவை சமாதானப்படுத்த அவரை தமிழ்நாடு ஆளுநராக்கியது காங்கிரஸ். இந்த நிலையில் தற்போது கிரண் குமார் ரெட்டி மூலம் பிரச்சினை எழுந்திருப்பதால் மறுபடியும் ரோசய்யாவை கொண்டு வர காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
நீண்ட காலம் ஆந்திர மாநில அமைச்சராக இருந்தவர் ரோசய்யா. ராஜசேகர ரெட்டி மரணத்திற்குப் பின்னர் 2009ம் ஆண்டு அவர் முதல்வர் பதவிக்கு அமர்த்ப்பட்டார். ஆனால் ரெட்டி ஆதரவாளர்கள் கொடுத்த குடைச்சலை அவரால் தாங்க முடியவில்லை. தட்டுத் தடுமாறினார். இதையடுத்து கிரண் குமார் ரெட்டி கொண்டு வரப்பட்டார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரமும், நாராயணசாமியும் ரோசய்யாவை சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோசய்யா என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை.