சேலத்தில் அத்வானி.. ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்
சேலம்: ஆடிட்டர் ரமேஷ் கொலையைத் தொடர்ந்து இன்று நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் அத்வானி சேலம் வந்துள்ளார். ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார்.
அத்வானி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் நகரம் முழுவதும் காக்கிகளின் முற்றுகையில் சிக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகளாகவே உள்ளன.
ஆடிட்டர் ரமேஷ் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் இதுவரை சிக்கவில்லை என்பதால் அசம்பாவிதம் ஏதும் நேரிட்டு விடக் கூடாது என்பதற்காக போலீஸார் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஜூலை 19ம்தேதி கொலை
பாஜக மாநிலச் செயலாளராக இருந்து வந்த ஆடிட்டர் ரமேஷ் ஜூலை 19ம் தேதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
ஆறுதல் சொல்ல
இன்று மதியம் சேலம் வந்த அத்வானி, அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் குரங்குச்சாவடி, 5 ரோடு, அஸ்தம்பட்டி வழியே வந்து மரவனேரியில் உள்ள ஆடிட்டர் ரமேஷ் இல்லத்திற்கு சென்றார். ரமேசின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
ஜவஹர் மில் மைதானத்தில் கூட்டம்
ரமேஷ் வீட்டு நிகழ்ச்சியை முடித்த பின்னர் மாலையில் ஜவஹர் மில் மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
5000 போலீஸார் குவிப்பு
அத்வானி, ரமேஷ் வீட்டுக்கு வந்தபோது அங்கு பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நகர் முழுவதும் கிட்டத்தட்ட 5000 போலீஸாருக்கும் மேல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நகர எல்லைகள் கடும் கட்டுப்பாட்டில்
அதேபோல சேலம் நகர எல்லைகள் அனைத்தும் கிட்டத்தட்ட சீல் வைக்கப்பட்டது போல உள்ளன. போலீஸார் சோதனைச் சாவடிகளை ஏற்படுத்தி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நகர் முழுவதும் போலீஸ் நடமாட்டம்
சேலம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போலீஸார்தான். ஏதாவது ராணுவ நகருக்குள் வந்து விட்டோமோ என்று மிரளும் அளவுக்கு கண்ணில் தென்படும் காட்சிகளில் எல்லாம் காக்கிகளே தெரிகின்றனர்.
வீடு வீடாக சோதனை
ரமேஷ் வீடு உள்ள பகுதி முழுவதும் போலீஸார் அத்தனை வீடுகளுக்குள்ளும் புகுந்து வீட்டில் இருப்பவர்களின் நிலவரத்தை சேகரித்து வைத்துள்ளனர். ஒரு வீடு பாக்கி இல்லாமல் அத்தனை வீடுகளிலும் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.
இப்படி இதுவரை இல்லை..
இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சேலம் மக்கள் கூறுகையில், இதுவரை இப்படி ஒரு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்த்ததே இல்லை என்று கூறுகிறார்கள்.