படுகர் சங்க தலைவராக அ.தி.மு.க எம்.எல்.ஏ. புத்தி சந்திரன் தேர்வு!
ஊட்டி: படுகர் சங்க தலைவராக ஊட்டி அதிமுக எம்.எல்.ஏ. புத்தி சந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், உதகையில் இளம் படுகர் சங்க அமைப்பு, படுகர் சமுதாயத்தின் முக்கிய அமைப்பாக கருதப்படுகிந்றது. இச் சங்கத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது.
இதனால், இச் சங்கத்திற்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, இச் சங்கத்திற்கு ஆகஸ்டு 2 ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நீலகிரி மாவட்டத்தின் நான்கு சீமைகளான தொதநாடு சீமையிலிருந்து 9 உறுப்பினர்களும், பொரங்காடு, மேற்குநாடு மற்றும் குந்தா சீமைகளிலிருந்து தலா 8 பேருமாக மொத்தம் 33 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் 33 பேரில், அதிமுகவை சேர்ந்த உதகை சட்டப் பேரவை உறுப்பினர் புத்திச்சந்திரன் போட்டியின்றித் தலைவராகத் தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் ஹெச்.தியாகராஜன் மற்றும் கடநாடு குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், தேனாடு லட்சுமணன் செயலராகவும், சண்முகம் இணைச் செயலராகவும், எல்.ராஜ்குமார் பொருளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற பின்பு , புத்திச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த அமைப்பு படுகர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவம் போன்ற உதவிகளைச் செய்யும்.
மேலும், இச் சங்கத்தின் 30 லட்ச ரூபாயை முறைகேடு செய்த, இதன் முன்னாள் தலைவர் டி.குண்டன் மீது காவல்துறையில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது.அந்த புகாரை விரைவு படுத்துவோம் என்றார்.
நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை படுகர் இன மக்களே அதிகம் வசிக்கின்றனர். அவர்களது வாக்கு வங்கி தான் பாராளுமன்ற உறுப்பினரை தீர்மானிக்கின்றது.
இந்த நிலையில், விரைவில் பாரளுமன்ற தேர்தல் வரும் நிலையில், நீலகிரியில் அதிமுக வெற்றி பெற பகீரத முயற்சிகள் செய்து வருகின்றது. தற்போது உள்ள திமுக. எம்.பி. ஆ.ராஜாவை வீழ்த்தியே தீர வேண்டும் என களத்தில் இறங்கி வருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே படுகர் சங்க தலைவராக அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. புத்திச் சந்திரன் தலைவரபாக தேர்வு செய்யப்பட்டதாகும்.