38வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை! 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூர்: மேட்டுர் அணை 38வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து காவிரி பாயும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் அம் மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட முக்கிய அணைகள் நிரம்பி விட்டன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அந்த அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமள என உயர்ந்து கடந்த 2-ந் தேதி 109 அடியை எட்டியதால் அன்று மதியம் அணையில் இருந்து காவிரி டெல்டா மற்றும் கால்வாய் பாசனங்களுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வந்து கொண்டு இருந்தது.

நேற்று காலை 118 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் பிற்பகல் 119 அடியாக உயர்ந்தது. நேற்று இரவு 10.30 மணி அளவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணை நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதற்கு முன் கடைசியாக மேட்டூர் அணை 2010-ம் ஆண்டு டிசம்பர் 2 ந் தேதி நிரம்பியது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நிரம்பி இருக்கிறது. கடந்த 1934ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது 38வது ஆண்டாக அணை முழு கொள்ளவை எட்டி நிரம்பி இருக்கிறது.
அணையின் பாதுகாப்பை கருதி நேற்று காலை 8.15 மணிக்கு உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த 2005ம் ஆண்டு இதேபோல 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டது. அதன்பின் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உபரிநீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.மேலும் டெல்டா பாசனத்துக்கு நீர்மின்நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், அணையின் மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டு இருப்பதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications