தே.மு.தி.க. செயலாளர் படுகொலை: கம்பம் அருகே பதற்றம்
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகில் தேமுதிக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம் அடுத்த நாராயணதேவன்பட்டியை சேர்ந்தவர் சின்னமுருகன் என்ற சந்திரன் (34). சந்திரன் தே.மு.தி.க. ஒன்றிய துணை செயலாளராகவும், மாவட்ட பிரதிநிதியாகவும் இருந்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி சுமதி (30) என்ற மனைவியும், ஓவியா, காவியா என்ற 2 மகள்களும் உள்ளனர். மேலும் கோழிக்கறி இறைச்சி வியாபாரம் பார்த்து வந்தார். இன்று காலை நாராயணதேவன்பட்டியில் இருந்து சுருளிபட்டி செல்லும் சாலையில் சந்திரன் கொடூரமான முறையில் முகம் மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார்.
இதை பார்த்ததும் அந்த வழியே நடந்து சென்றவர்கள் ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்திரன் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் இறந்து கிடந்ததால் அவருக்கு விரோதிகள் யாரும் உள்ளனரா? என்று அவரது மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது இவர் அரசியல் பிரமுகராக இருப்பதால் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்தார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சந்திரனின் உடலை பார்த்து அவரது மனைவியும், உறவினர்களும் கதறி அழுதனர்.
சந்திரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் தே.மு.தி.க.வை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கூடினர்.அவர்கள் கொலையாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும் என்று போலீசாருக்கு எதிராக குரல் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.