சோனியா மருமகன் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும்: கலகக் குரல் எழுப்பும் காங். எம்.பி.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா, ஹரியானாவில் உள்ள குர்கான் அருகே ஷிகோபுர் என்ற இடத்தில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை மிக குறைந்த விலை கொடுத்து வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டினார் சமூக ஆர்வலரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால்.
அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கிய இம்முறைகேடு குறித்து, விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை நியமித்தது ஹரியானா அரசு. அதனைத் தொடர்ந்து, இந்த நில மோசடி மீது நடவடிக்கை எடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா, விசாரணை குழுவிடம் ஓர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், போலியான ஆவணங்களை கொடுத்து ராபர்ட் வதேரா மோசடியில் ஈடுபட்டதாகவும், பத்திரப்பதிவுத் துறையை ஏமாற்றி பல கோடி ரூபாயை அவர் சம்பாதித்துள்ளதாகவும் கெம்கா தெரிவித்துள்ளார்.
வதேரா விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பும் என காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்து வரும் நிலையில், ஹரியானா மாநில குர்கான் தொகுதி எம்.பியான ராவ் இந்திரஜித் என்பவர் வதேரா தவறு நிரூபிக்கப்பட்டால் அவர் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
இது குறித்து இந்திரஜித் கூறியுள்ளதாவது, ‘ ராபர்ட் வதேரா மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர் குற்றவாளி என்று கண்டறியப்பட்டால், அவர் தண்டிக்கப்பட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.