கடற்கரை மணல் செல்வம் கொள்ளை போவதைத் தடுப்பீர்!: வைகோ
சென்னை: மணல் மாஃபியாக்களின் சுயநலத்திற்காக, கிராமங்களில் பிரிவினைகள் தூண்டப்படுகின்றன; சமூக நல்லிணக்கம் கெடுகிறது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே கடற்கரை மணல் செல்வம் கொள்ளை போவதைத் தடுக்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தென்தமிழகத்தின் கடலோரங்களில் இருக்கின்ற, கனிம வளம் பொருந்திய கடற்கரை மணல், அதன் கெட்டித் தன்மையால், கடலோரப் பகுதிகளில் ஒரு தடுப்பு அணையாக, கடல் நீர் உட்புகாத வண்ணம் அப்பகுதி மக்களைக் காத்து வந்தது.
அந்த மணலை அள்ளுவதற்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவைவிட முறைகேடாக, தங்கு தடையின்றி மணல் அள்ளியதைத் தொடர்ந்து, தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பதற்காக அந்தப் பகுதி மக்கள் போராடி வருகிறார்கள்.
தமிழக அரசு ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் இல்மனைட், ரூட்டைல் மற்றும் கார்னட் ஆகிய கனிங்கள் அடங்கிய மணல் சட்டத்திற்குப் புறம்பாக அள்ளப்பட்டு வந்தது. இதனால், இயற்கை வளமே அழிந்து கொண்டு இருக்கின்றது.
லட்சக்கணக்கான டன்
குறிப்பாக, வைப்பார் கிராமத்தில், அரசு அனுமதி எதுவும் இல்லாமல், 2 இலட்சத்து 30 ஆயிரம் டன் கடற்கரை மணல் தாது அள்ளப்பட்டு உள்ளது. தற்போது, இதுகுறித்து ஆய்வு நடத்த, தமிழக அரசு முன்வந்து உள்ளது.
மணல் அள்ளத் தடை
இத்தகைய கனிமங்கள் அடங்கிய மணலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களிலும் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம், தமிழ்நாடு மற்றும் கேரளக் கடற்கரை மற்றும் கடலோரப் பகுதிகளில், சட்டவிரோதமாக மணல் மற்றும் தாது மணலை அள்ளத் தடை விதித்து உள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மாநில சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி இல்லாமல், மணல் மற்றும் தாது மணல் அள்ளக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மீனவர்கள் பாதிப்பு
பகாசுர எந்திரங்களின் உதவி கொண்டு கடற்கரை மணல் அள்ளப்படுவதால், கடலின் நீரோட்டம் திசைமாறி - கடல் சீற்றத்திற்கு ஆளாகி, கடல் நீர் உட்புகுவதால் அன்றாடம் வீடு வாசல்களைப் பறிகொடுக்கும் அவலநிலை தொடர்கிறது.படகுகளைக் கரையில் நிலைநிறுத்த முடியவில்லை.
புற்றுநோய் பாதிப்பு
மணல் ஆலைகளில், கார்னெட் மணல் பிரித்து எடுக்கப்படும்போது ஏற்படுகின்ற கதிர் வீச்சு காரணமாகவும், ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படுகின்ற கதிரியக்கக் கழிவு நீரினாலும், கடலோரப் பகுதிகளில் வசிக்கின்ற மீனவ மக்களில் பலர், சிறுநீரக, நுரையீரல் மற்றும் புற்று நோய்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
மீன்வளம் குறைந்துவிட்டது
கழிவு நீர் கடலில் கலப்பதால், கடலில் மீன்வளம் குறைந்து விட்டது; மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது.
மணல் மாஃபியாக்களின் சுயநலத்திற்காக, கிராமங்களில் பிரிவினைகள் தூண்டப்படுகின்றன; சமூக நல்லிணக்கம் கெடுகிறது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
சட்டவிரோத கொள்ளை
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் அல்ல, தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் முழுமையும் மணல் அள்ளுவதைத் தடுத்து நிறுத்தி, மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்வு உரிமையையும் காத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்; சட்ட விரோத மணற் கொள்ளையர்களின் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிமத்தை ரத்து செய்க
சட்ட விரோத மணல் கம்பெனிகளின் உரிமத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும்; மணல் கம்பெனிகளால் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.