நைஜீரியாவில் இஸ்லாம் நாடு கேட்டுப் போராடிய தீவிரவாத தலைவன் மொபாடு பாமா சுட்டுக்கொலை
அபுஜா: நைஜீரிய தீவிரவாத இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவனான மொபாடு பாமா என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கம் போக்கோ ஹரம். அதன் இரண்டாம் கட்ட தலைவன் மொமொடு பாமா. இவனது தலைக்கு 1.55 லட்சம் டாலர் பரிசுத் தொகை அறிவித்திருந்தது நைஜீரிய அரசு. இந்திய மதிப்பில் இது சுமார் 96 லட்சம் ஆகும்.
நைஜீரியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியை இஸ்லாமிய சட்ட திட்டப்படி ஆட்சி நடக்கும் இடங்களாக மாற்ற வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள். இதற்காக ஆயுதம் ஏந்திப் போராடும் இவர்களது போராட்டத்தில் சிக்கி, இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், போர்னோ மாநில தலைநகர் மைடுகியில் உள்ள கொடுங்கா பகுதியில் அரசு படைகளுக்கும், போக்கோ ஹரம் தீவிரவதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மொமொடு பாமா கொல்லப் பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது நைஜீரிய அரசு.
மொமொடுவுடன் சேர்த்து அவனது தந்தை அபாட்சா பிளாடாரி உட்பட 19 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனை நைஜீரிய உள்துறை அமைச்சர் அப்பா மோரா உறுதி படுத்தியுள்ளார்.