தேசிய நீரோட்டத்தில் இருந்து நம்மை மட்டும் தனிமைப்படுத்துகிறார்கள்: உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: தேசிய நீரோட்டத்தில் இருந்து காஷ்மீர் மக்கள் மட்டும் ஏன் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி அரங்கில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பலத்த பாதுகாப்புக்கு இடையே நடந்த இந்த விழாவில் உமர் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் என்ன பேசினார் என்பதன் விவரத்தை பார்ப்போம்.
மக்களுக்கு சல்யூட்
மாநிலத்தில் அமைதியைக் கெடுக்க முயன்ற சக்திகளை தோற்கடித்த மக்களுக்கு தலை வணங்குகிறேன் என்றார் உமர்.
நம்மை மட்டும் ஏன் இப்படி?
தேசிய நீரோட்டத்தில் இருந்து நீங்கள் மட்டும் தனியாக உள்ளது போல் ஏன் இந்த காஷ்மீர் மக்கள் உணர்கிறீர்கள் என்று என்னிடம் அடிக்கடி கேட்கின்றனர். அந்த கேள்வி குறித்து நினைத்து பார்த்தேன். ஆனால் அதற்கு பதில் கூறுவது கடினம். கிஸ்தவார் சம்பவத்தை எப்படி பிறர் எடுத்துக் கொண்டார்கள் என்பதைப் பார்க்கையில் அந்த கேள்விக்கான விடை கிடைத்தது.
காஷ்மீரிகள் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகிச் சென்றவர்களைப் போன்று தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்று உமர் தெரிவித்தார்.
என் ஆட்சியில் முதல் முறை
நான் ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் நம் மாநிலத்தில் நடந்த முதல் சமூக மோதல் கிஸ்தவார் சம்பவம். 3 பேரின் உயிரை பலி கொண்ட இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன். என் ஆட்சியில் இந்த சம்பவம் நடந்தது வருத்தம் அளிக்கிறது. இது போன்ற சம்பவம் இந்தியாவில் முதன் முதலாகவா நடந்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார் உமர்.
அமைதிப் பேச்சு
பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்தால் இருநாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சியம் பாதிக்கப்படும் என்று உமர் கூறினார்.