ஆசிரியர் தகுதி தேர்வு: நாளை 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த தேர்வினை தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதுகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு 17, 18ம் தேதிகளில் நடக்கிறது. இதில் முதல் தாள் எனப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு சனிக்கிழமையும், இரண்டாம் தாள் எனப்படும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஞாயிறன்றும் நடைபெற உள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 909 இடைநிலை ஆசிரியர்கள் முதல் தாளை எழுதுகின்றனர். அதுபோல் 4 லட்சத்து 18 ஆயிரத்து 308 பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டாள் தாளை எழுதுகின்றனர். மொத்தத்தில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 6 லட்சத்து 90 ஆயிரத்து 217 பேர் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுகின்றனர்.
சிறப்பு கண்காணிப்பு
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆசிரியர் தகுதி தேர்வை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்களை தலைவராக கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த 32 இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் அடங்கிய குழுவினர் தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை நடத்தும் பணியில் 29 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை நடத்தும் பணியில் 42 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் களம் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வை 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளும், 2 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையற்றவர்களும் எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக அவர்களுக்கு கீழ் தளத்தில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் பார்வையற்றவர்களுக்கு அவர்களுக்கு பதிலாக தேர்வு எழுத மாற்று நபர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். பார்வையற்றவர்கள் மட்டும் தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1,170 தேர்வு மையங்களில் தகுதி தேர்வு நடக்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17ம் தேதி விடுமுறை
டி.இ.டி., தேர்வையொட்டி, நாளை 17ம் தேதி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட, அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பெரும்பாலும், சனிக்கிழமைகளிலும் இயங்குகின்றன. சனிக்கிழமைகளில், அரை நாள் மட்டும் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த நேரத்தில் தான், தேர்வும் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை, தேர்வு நடக்கிறது.












Click it and Unblock the Notifications