மாவட்டந்தோறும் கோஷ்டிகள்! சென்னையில் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்!!
சென்னை: ஒவ்வொரு மாவட்டத்திலும் கோஷ்டிப் பூசல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த முட்டுக்கட்டைகளைத் தகர்த்து லோக்சபா தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வியூகம் வகுக்க சென்னையில் இன்று மாவட்டச் செயலர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
திமுகவில் தலைமைக் கழக நிர்வாகிகள் முதல் கிளைக் கழக நிர்வாகிகள் வரை ஒவ்வொருவரும் ஒரு அணி!
இதைத்தான் மே 19-ந் தேதி நடைபெற்ற திமுகவின் பேச்சாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, கோஷ்டிப் பூசல்களால் திமுக செல்லரித்து வரும் நிலையில் இருக்கிறது. இதை வெட்கப்படாமல், வெளிப்படையாகச் சொல்கிறேன். இந்த உண்மையை மறைத்துவிட்டு, ஒரு தலைவன் - நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம் என்று சொன்னால், அது உசுப்பி விடுவதற்காக சொல்லப்படும் வார்த்தைகள்.
திருவாரூர் சென்றுவிட்டு சென்னை திரும்பினேன். மக்கள் கூட்டம் அதிகம் கூடிய பரவசம். மறுநாள் அதே திருவாரூரில்தான், திமுகவினருக்குள்ளேயே கலவரம். அதைவிட அவமானம் எனக்கு எதுவும் இருக்க முடியாது. அங்கு கட்சி வளர்ந்ததும் ஒன்றுதான். வளராமல் போனதும் ஒன்றுதான் என்று வேதனையுடன் கூறினார்.
திமுகவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டத்திலுமே கோஷ்டிப் பூசல்கள் இருப்பது வெளிப்படையான ஒன்றுதான்
தஞ்சாவூரில் பழனி மாணிக்கம்- டி.ஆர். பாலு
தஞ்சாவூரில் முன்னாள் மத்திய அமைச்சர் பழநிமாணிக்கம் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் தலைமையில் இரு அணிகள் அடிக்கடி மோதிக் கொள்வதும் அறிவாலயத்தில் பஞ்சாயத்து நடைபெறுவதும் வாடிக்கை.
திருச்சி கே.என். நேரு- செல்வராஜ்
திருச்சியில் மாவட்டச் செயலாளர் நேரு மற்றும் செல்வராஜ் ஆகியோர் தனித்தனி ஆவர்த்தனம்
தூத்துக்குடியில் மூன்று கோஷ்டி
தூத்துக்குடியில் 3 அணிகளாக திமுகவினர் பிரிந்துள்ளனர். தூத்துக்குடி பெரியசாமி, ஜெயதுரை மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரது அணிகளிடையே கடுமையான பிளவு இருக்கிறது..
நெல்லையில் 'க', 'ஆ' கோஷ்டிகள்
திருநெல்வேலியில் கருப்பசாமிபாண்டியன், ஆவுடையப்பன் ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக திமுகவினர் பிரிந்துள்ளனர்.
சேலம் ராஜா- ராஜேந்திரன்
சேலத்தில் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் மகன் வீரபாண்டி ராஜா மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் தலைமையில் இரு அணிகள் மோதிக் கொள்வது வாடிக்கை.
ராமநாதபுரத்தில் தாத்தா- பேரன்
ராமநாதபுரத்தில் தாத்தா சுப. தங்கவேலன், பேரன் ரித்தீஷ் ஆகியோர் கோஷ்டி அமைத்து பெரும் மோதலில் ஈடுபடுவது வழக்கம்.
குமரியில் சுரேஷ் ராஜன் -ஹெலன் டேவிட்சன்
கன்னியாகுமரியில் சுரேஷ்ராஜன்- ஹெலன் டேவிட்சன் ஆகியோரது கோஷ்டிகளில் திமுகவினர் பிரிந்துள்ளனர்..
மதுரை சுற்றுவட்டார மாவட்டங்கள்
மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மு.க. அழகிரி-மு.க. ஸ்டாலின் அணி
சென்னை சுற்றுவட்டார மாவட்டங்கள்
சென்னை, திருவள்ளூர் சுற்றுவட்டார மாவட்டங்களில் அழகிரி அணி இல்லாவிட்டாலும் மு.க.ஸ்டாலின் அணி- கனிமொழி அணி என பிரிவினை
இப்படி அணிகளாகப் பிரிந்து கிடப்பது கட்சிக்கு பிணி என்று கருதியதால் இன்று மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை திமுக தலைவர் கூட்டி லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுத்தார் கருணாநிதி.