ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்க எதிர்ப்பு! தனி மாநிலமாக அறிவிக்க கோரிக்கை!
ஹைதராபாத்: ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலமாக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போது ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மாறாக, ஹைதராபாத்தை தனி மாநிலமாக அறிவித்து விடவும் கோரிக்கை எழுந்துள்ளது.
10 வருடத்திற்குப் பொது
தெலுங்கானாவுக்கும் சீமாந்திராவுக்கும் ஹைதராபாத் 10 ஆண்டுகாலத்துக்கு பொதுதலைநகராக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதே நேரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அது தெலுங்கானாவுக்கு சொந்தமா? சீமாந்திராவுக்கு உரியதா? என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
கிரேட்டர் ஹைதராபாத்தில் எதிர்ப்பு
இந்நிலையில் ஹைதராபாத்தை தெலுங்கானாவின் ஒருபகுதியாக சேர்ப்பதற்கு கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பேசாமல் தனி மாநிலமாக்கி விடலாமே
அத்துடன் தெலுங்கானாவுடன் ஹைதராபாத்தை சேர்ப்பதற்கு பதிலாக அதை தனிமாநிலமாகவே அறிவித்துவிடுங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடிப் பேசி ஆலோசனை
ஹைதராபாத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் தனம் நாகேந்தர் மற்றும் முகேஷ் கவுட் ஆகியோர் அப்பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாகவோ, தெலுங்கானாவின் ஒருபகுதியாகவோ மாற்றக் கூடாது.. அப்படி மாற்ற முடிவெடுத்தால் ஹைதராபாத்தையே தனி மாநிலமாக்கிவிட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
அந்தோணி குழுவிடம் மனு
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஏ.கே. அந்தோணி தலைமையிலான கமிட்டியிடம் தெரிவிக்கவும் 'ஹைதராபாத்' குழு டெல்லி சென்றுள்ளது.