தோற்றுப் போன ஃபேஸ்புக் காதல்: தேமுதிக எம்.எல்.ஏ. மருமகன் கடத்தலா? நாடகமா?
தேமுதிக எம்.எல்.ஏ அருண்சுப்ரமணியத்தின் மருமகனை காணவில்லை, கடத்தப்பட்டுள்ளார் என்று பரபரப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் இது முழுக்க முழுக்க என்னிடம் இருந்து பணம் பறிக்கும் முயற்சி என்று புகார் தெரிவித்துள்ளார் அருண் சுப்ரமணியன் எம்.எல்.ஏ.
இது கடத்தலா? நாடகமா? என்று கண்டுபிடிக்கமுடியாமல் போலீசாரே திணறத்தொடங்கியுள்ளனர். எம்.எல்.ஏவின் மருமகன் தமிழ்நாட்டில் இருக்கிறாரா? வெளிநாட்டில் இருக்கிறாரா? என்று அவரது செல்போன் மூலம் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
என்னதான் நடக்கிறது அருண்சுப்ரமணியத்தின் குடும்பத்தில் என்று விசாரித்த போது தெரியவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டும் விதமாகமே அமைந்துள்ளது.
ஃபேஸ்புக் காதல்
திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ அருண்சுப்ரமணியத்தின் மகள் நித்யா எம்.பி.பி.எஸ் படித்திருக்கிறார். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் ரமேஷ் என்பவருடன் நட்பு ஏற்படவே அதுவே பின்னர் காதலாக மாறி திருமணம் வரை சென்றுள்ளது.
வீட்டை எதிர்த்து
பெற்றோர் சம்மதிக்காத நிலையில் குடும்பத்தை எதிர்த்துக் கொண்டு 2010 ஆண்டு ரமேஷ் - நித்யா திருமணம் நடந்துள்ளது. வடபழனியில் வசித்துவந்த அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.
ரமேஷ் மாயம்
இந்த நிலையில் அப்பாவின் வீட்டுக்குப் போன நித்யா கணவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. நித்யாவைத் தேடிச்சென்ற ரமேஷ் காணமால் போய்விட்டதாக அவரது தாயார் கடந்த வாரம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
நித்யாவின் ஏமாற்றம்
அதேசமயம் தனது கணவர் ரமேஷ் தன்னை ஏமாற்றிவிட்டதாக நித்யா போலீசில் புகார் கூறியுள்ளார். பள்ளிப்படிப்பு கூட படிக்காத ரமேஷ் எம்.பி.பி.எஸ், ஏரோநாட்டிகள் எஞ்ஜினியரிங் படித்திருப்பதாக கூறி ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். பணம், நகை, கார் ஆகியவைகளை பறித்துக்கொண்டு கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார். ரமேஷ் எங்கிருக்கிறார் என்று அவரது தாயார் ராஜகுமாரிக்குத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பணம் பறிக்கத் திட்டம்
ஆனால் எம்.எல்.ஏ அருண் சுப்ரமணியமோ, ''ரமேஷை யாரும் கடத்திச் செல்லவில்லை. அவர் காணாமலும் போகவில்லை. அவர் இப்போது சிங்கப்பூரில் இருக்கிறார். அங்கிருந்து என் மகளிடம் பேசியதை ரெக்கார்ட் செய்துவைத்திருக்கிறோம். அவரை சிங்கப்பூரில் பார்த்த சாட்சியும் இருக்கிறார். அவர் சிங்கப்பூரில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இன்னும் சில ஆவணங்கள் கிடைத்ததும், டி.ஜி.பி-யைச் சந்தித்து என் மீது புகார் தந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லப்போகிறேன்.' என்கிறார். இதில் எது உண்மை என்று தெரியாமல் தமிழக போலீசார்தான் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனராம்.