செப்டம்பரில் பிரமாண்ட கூட்டம்.. தமிழகத்தைக் கவருமா மோடி வித்தை?
சென்னை: செப்டம்பர் மாதம் தமிழத்துக்கு வருகிறார் நரேந்திர மோடி. செப்டம்பர் 26ம் தேதி பிரமாண்ட இளைஞர் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறாராம். இதை பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் அறிவித்துள்ளார்.
சென்னை வந்த ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.
இந்த கூட்டம் மிகப் பிரமாண்டமானதாக இருக்கும் என்றும், கூட்டம் நடைபெறும் இடம், பிற ஏற்பாடுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார் ராவ். இதுகுறித்து அவர் கூறியதாவது...
பிரமாண்டமான இளைஞர் கூட்டம்
செப்டம்பர் 26ம் தேதி பிரமாண்டமான இளைஞர் கூட்டம் மற்றும் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துவார். இடம் தொடர்பான பிற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இளைஞர்கள்தான் குறி
வாக்காளர்களில் 35 வயதுக்குட்பட்டோர் மட்டும் 60 சதவீதம் பேர் உள்ளனர். எனவே இளைஞர்களை கவரும் வகையில் மோடி தனது கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறார்.
கொள்கைப் பிடிப்புடன்
இளைஞர்கள்தான் இன்று கொள்கைப் பிடிப்புடன், லட்சிய வேட்கையுடன் திகழ்கின்றனர்.
2014 தேர்தலில் மோடிதான் முக்கியம்
2014 பொதுத் தேர்தலில் மோடி பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழல்களை அவர் மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவார்.
ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் யார்
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ந்துள்ளது. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கொள்கையின்றி செயல்படுவதே காரணம்.
வெளிநாட்டுக் கொள்கையில் உறுதியில்லை
இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கையிலும் ஒரு உறுதியான நிலைப்பாடு இல்லை. பாகிஸ்தான், சீனா, இலங்கை என அண்டை நாடுகளுடன் தெளிவற்ற வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.
அரசை ஆதரிக்கத் தயார்.. ஆனால்
மத்திய அரசு தெளிவான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடித்தால் நிச்சயம் பாஜக அதை ஆதரிக்கும். ஆனால் பாஜகவை தாக்குவதிலேயே அதிக நேரத்தை செலவிடுகிறது மத்திய அரசு என்றார் ராவ்.