நெருக்கடி இருந்தாலும் பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது - ப.சிதம்பரம்
டெல்லி: ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கம் போன்ற நெருக்கடி இருந்தாலும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், நடப்பு நிதி கணக்குப் பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
உள்நாடு மற்றும் உலக நாடுகளின் காரணிகளால் பொருளாதார சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் நாம் அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். உலக நாடுகளை ஒப்பிடுகையில் நமது நாட்டின் பொருளாதாரம் சிறப்பானதாகவே இருக்கிறது.
ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நமது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு வங்கி வாராக்கடன் சுமை கூடுதலாவதும் ஒரு காரணம். இதனால் வெளிநாட்டில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதை கட்டுப்படுத்த மாட்டோம்.
வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதத்துக்குள் நமது பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்றார்.