இன்போசிஸ் நிறுவனத் துணைத்தலைவராகிறார் நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இன்போசிஸ் நிறுவனம் விளங்குகிறது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் சமீப காலங்களில் பெரும் பின்னடைவை சந்தித்ததையடுத்து ஓய்வு பெற்றிருந்த நாராயண மூர்த்தி சென்ற ஜூன் மாதம் மீண்டும் கம்பெனி பொறுப்பிற்கு வந்தார். இந்த நிலையில் அவரது 30 வயது மகன் ரோஹன் மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
30 வயதான ரோஹன் மூர்த்தி ஹார்வர்டு பல்கலைக்கழக உறுப்பினர்கள் சங்கத்தின் இளம் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் புகழ்பெற்ற அந்த பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் சைன்சில் பிஎச்.டி பட்டம் பெற்றுள்ளார்.
கார்னல் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சைன்சில் இளங்கலை முடித்தார். எம்.ஐ.டி., கால்டெக் மற்றும் மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி ஆகியவற்றில் உறுப்பினராகவும் அவர் இருந்து வருகிறார்.
இன்போசிஸ் நிறுவனத்தில் ரோஹன் தனது தகப்பனார் நாராயணமூர்த்தியின் நிர்வாக உதவியாளராக பணியில் சேர்ந்தார். இதுவரை கம்பெனியின் எந்த தலைவர் பதவியையும் ஏற்கவில்லை. ஒரு சிறந்த நிர்வாகியாக கொண்டு வரும் நோக்கில் இப்பொழுது அவர் இப்பதவிக்கு கொண்டுவரப்படுகிறார்.
ரோஹன் இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராக மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சம் இதற்கான ஒப்புதலை வழங்கவேண்டும். இந்த நியமனத்திற்கான நடவடிக்கைகள் முடிந்தவுடன் அவருக்கான பதவியும் உறுதிப்படுத்தப்படும் என்று இன்போசிஸ் நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.