யார் இந்த யாசின் பட்கல்?: அவன் மீதுள்ள வழக்குகள் எத்தனை?
டெல்லி: தேசிய புலனாய்வு நிறுவனத்தாரால் கைது செய்யப்பட்டுள்ள இந்தியன் முஜாஹிதீன் நிறுவனர் யாசின் பட்கல் மீதுள்ள வழக்குகளைப் பற்றி பார்ப்போம்.
பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்திய முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் இன்று நேபாளில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் யார் இந்த யாசின் பட்கல் என்று பார்ப்போம்.
கர்நாடகத்துக்காரர்
கர்நாடக மாநிலம் பட்கல் பகுதியில் 1983ம் ஆண்டு பிறந்தவர் யாசின் பட்கல். அங்குள்ள அஞ்சுமன் ஹமி இ முஸ்லிமீன் மதரஸாவில் படித்த பிறகு பட்கல் 1990ம் ஆண்டு புனேவுக்கு சென்றார். அதன் பிறகு அவர் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை துவங்கினார்.
குற்றப்பத்திரிக்கை
கடந்த 2007ம் ஆண்டில் இருந்து நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் 10 சம்பவங்களிலாவது பட்கலுக்கு தொடர்பு உள்ளது என்று 12 மாநிலங்களின் தீவிரவாத தடுப்பு ஏஜென்சீக்கள் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளன.
குண்டுவெடிப்புகள்
ஹைராபாத்(2007)(இரட்டை குண்டுவெடிப்பு), அகமதாபாத் (2008), சூரத்(2008), ஜெய்பூர் (2008), டெல்லி (2008), வாரனாசி (2010), பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் (2010), புனே ஜெர்மன் பேக்கரி (2011), மும்பை (2011), ஹைதராபாத் (இரட்டை குண்டுவெடிப்பு) (2013), பெங்களூர் (2013) ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் யாசின் பட்கலுக்கு தொடர்பு உள்ளது.
மாறுவேட மன்னன்
பட்கலுக்கு தொழில்நுட்பம் பிடிக்காதாம். ஆனால் போலீசாரை ஏமாற்ற மாறுவேடமிட்டு திரிவதில் வல்லவனாம்.
2009ல் கைதாகி விடுதலை
யாசின் பட்கல் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு திருட்டு வழக்கில் கொல்கத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் தான் புல்லா மாலிக் என்றும், தான் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்றும் கூறி நைசாக வெளியே வந்துவிட்டார். புல்லா மாலிக் தான் யாசின் என்று போலீசாரால் நிரூபிக்க முடியாமல் போனது.
இந்திய-நேபாள எல்லையில் காத்திருப்பு
யாசின் பட்கலின் இருப்பிடம் குறித்து தகவல் அறிந்து டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இந்திய-நேபாள எல்லையில் ஒரு வாரமாக காத்திருந்தனர்.
இறுதியில் கைது
போலீசாரின் காத்திருப்பு வீண் போகவில்லை. இந்திய-நேபாள எல்லையில் பட்கலை தேசிய புலனாய்வு நிறுவனத்தார் இன்று கைது செய்தனர்.