எந்த நாட்டிலாவது பிரதமரை திருடன்னு சொல்வாங்களா?- ராஜ்யசபாவில் மன்மோகன் சிங்
டெல்லி: எந்த ஒரு நாட்டிலாவது நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் சபையின் நடுவில் ஒன்று கூடி பிரதமரை ஒரு திருடன் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறீர்களா என்று ராஜ்யசபாவில் பிரதமர் மன்மோகன்சிங் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலடியாக எந்த ஒரு நாட்டிலாவது ஒரு பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல வாக்குகளை விலைக்கு வாங்கியதுண்டா? என்று பாஜகவின் அருண்ஜேட்லி பதிலடி கொடுத்தார்.
ராஜ்யசபாவில் ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்தார்.
பிரதமரை திருடன் என்று சொன்னதை கேள்விப்பட்டீர்களா
அப்போது பேசிய பிரதமர் மன்மோகன்சிங், எந்த ஒரு நாட்டிலாவது இப்படி எம்.பிக்கள் சபையின் மையப்பகுதிக்கு நடுவே வந்து பிரதமருக்கு எதிராக பிரதமர் ஒரு திருடன் என்று முழக்கமிடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாட்டின் மீது நம்பிக்கையை அரசும் எதிர்க்கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும்.
நிலக்கரி கோப்பு மாயமனாதில் தொடர்பு இல்லை
இந்தியாவில் முதலீட்டுக்கான சூழல் இருக்கிறது என்பதை அரசும் எதிர்க்கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும். நிலக்கரி ஒதுக்கீடு கோப்புகள் மாயமானதில் எனக்கு எந்த பங்கும் இல்லை. என் பொறுப்பிலும் அந்த கோப்புகள் இருக்கவும் இல்லை என்று கூறினார்.
அமைச்சர்களை அறிமுகப்படுத்துவதில் இடையூறு!
மேலும் எந்த ஒரு நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையிலாவது அமைச்சர்களை பிரதமர் அறிமுகப்படுத்தும் போது எதிர்க்கட்சிகள் அதை அனுமதிக்காததை கேள்விபட்டது உண்டா? என்று பிரதமர் மன்மோகன்சிங் கேள்வி எழுப்பினார்.
வாக்குகளை விலைக்கு வாங்கிய பிரதமர்
உடனே எழுந்த பாஜக தலைவர் அருண் ஜேட்லி, எந்த ஒரு ஜனநாயகத்திலாவது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக ஒரு பிரதமரே வாக்குகளை விலைக்கு வாங்கியதைக் கேள்விபட்டது உண்டா? என்று பதில் கேள்வி எழுப்ப அவை பரபரப்பானது.