கச்சத்தீவு.. வாஜ்பாய்: கருணாநிதி பாயிண்ட்டை வைத்து ராஜ்யசபாவில் அதிமுக மைத்ரேயன் பேச்சு

கச்சத்தீவு பிரச்னை குறித்து ராஜ்யசபாவில் இன்று மைத்ரேயன் பேசினார். அப்போது அவர், 1974 ஆம் ஆண்டு ஜூன் 26ல் கச்சத்தீவு இலங்கையிடம் அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி- இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது என்றும் மைத்ரேயன் கூறினார்.
இந்திரா காந்தி- ஸ்ரீமாவோ ஒப்பந்தத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை என்று கூறிய மைத்ரேயன், கச்சத்தீவை இலங்கையிடம் அளித்தது தொடர்பாக அரசியல் சட்ட திருத்தமும் செய்யப்படவில்லை என்றார்.
எனவே கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம் என மது லிமாயி போன்ற தலைவர்களும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என கூறியுள்ளனர்.
கச்சத்தீவை மீட்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும், கச்சத்தீவை மீட்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் மைத்ரேயன் தெரிவித்தார்.
இந்த நிலையில் கச்சத்தீவை திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்து, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டது என்று மைத்ரேயன் குற்றம்சாட்டினார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று விடுத்த அறிக்கையில் கச்சத்தீவு பற்றி வாஜ்பாய் கூறிய கருத்தை சுட்டிக்காட்டியிருந்தார். அதையே இன்று தனது பாயிண்டாக ராஜ்யசபாவில் பதிவு செய்துள்ளார் அதிமுக உறுப்பினர் மைத்ரேயன்.












Click it and Unblock the Notifications